சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த இ.கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு: கூட்டணிக்கு அச்சாரம்?
சென்னை: சூரியனும் சந்திரனும் ஒரே இடத்திலா? கிழக்கும் மேற்கும் எப்படி ஒரே இடத்தில் என்று கூட கேட்கலாம். தமிழ்நாட்டில் எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரும் ஒரே இடத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இன்று சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற நேரு 125 சிறப்பு புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் கம்யூனிஸ்ட், முஸ்லீம்லீக் தலைவர்கள் பங்கேற்றது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நேருவின் 125வது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் இதழான தேசிய முரசு 7வது ஆண்டு விழா இன்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தர்ராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.
நேருவின் 125-வது ஆண்டு பிறந்தநாள் சிறப்பிதழை முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். தொடர்ந்து
நேரு 125
நேரு 125 என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய கோபண்ணா, ‘முன்பு ஒருமுறை ‘காமராஜர் ஒரு சகாப்தம்' என்ற நூல் வெளியீட்டின் போது அதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். பிற்காலத்தில் அது ஒரு மெகா கூட்டணி அமைய அடித்தளமாக இருந்தது என்றார்.
மதசார்பற்ற கட்சித்தலைவர்கள்
அது போல் இந்த விழாவில் மதசார்பற்ற கட்சி தலைவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். கூட்டணி அமையுமா என்பது தெரியாது. ஆனால் மத சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு இது ஆரம்ப கட்டமாக அமையும்' என்றார்.
சமஸ்கிருத திணிப்பு
நல்லகண்ணு பேசும் போது, ‘இதுதேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரமல்ல அதே நேரத்தில் மதசார்புள்ள கட்சிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவது குறித்து மத சார்பற்ற கட்சிகள் சிந்திக்க வேண்டும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்க்கிறோம்' என்றார்.
இணைந்து போராடுவோம்
இது தேர்தல் கூட்டணி மேடை அல்ல. அதே நேரத்தில் மதசார்பற்ற கட்சிகளோடு இணைந்து வகுப்பு வாத சக்திகள் எடுக்கும் முடிவை எதிர்க்க போராடுவோம் என்றார் கருத்தரங்கில் பேசிய சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. காங்கிரசோடு மட்டுமல்ல. மதசார்பற்ற அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் அதற்கான ஒரு பரந்த மேடையை உருவாக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். மதசார்பின்னைமையை விட்டு விட்டால் நாடு நாடாக இருக்காது என்றும் அவர் பேசினார்.
நேரு பாதையில்
காதர் மொய்தீன் பேசும் போது, ‘இந்திய வளர்ச்சிக்கான கொள்கையை வகுத்து கொடுத்தவர் நேரு. அவர் அழைத்து வந்த பாதையில் சென்றால்தான் நாடு வளர்ச்சி அடையும். சமநாடு, ஜனநாயக சமய சார்பற்ற பாதையில் சென்றால்தான் நாடு நாடாக இருக்கும்' என்றார்.
ஒரே சந்தோசம்தான்
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பு ஏற்றதும், தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்களை நேரில் சென்று சந்தித்தார். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு போல புத்தக வெளியீட்டு விழாவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் அனைத்துக் கட்சித்தலைவர்களுமே மகிழ்ச்சியுடன் பேசியது கண்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஒரே உற்சாகம்தான்.
வாசன் கூட சேர்ந்து விடக்கூடாதே
எதிர்காலத்தில் வாசன் கோஷ்டியுடன் கம்யூனிஸ்ட்கள் இணைந்து விடக்கூடாதே என்ற அச்ச உணர்வு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு காணப்பட்டதுபோல எனவேதான் நேரு 125 புத்தகவெளியீட்டுவிழா முன்வைத்து அனைவரையும் சத்திய மூர்த்தி பவனுக்கு அழைத்து வந்துவிட்டார் இளங்கோவன்.
கூட்டணிக்கான அச்சாரம்
எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க இந்த சந்திப்பு அச்சாரம் என்று பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த விழா அமைந்தது என்றே கூறலாம்.