நாங்க செத்துட்டோம் சம்பத்..!
சென்னை: சிலரை திட்ட மனசே வராது.. காரணம் அவர்களின் ஆளுமையாக இருக்கும். மொழி ஆளுமை அல்லது பேச்சு ஆளுமை அல்லது இப்படி வேறு ஏதாவது வலுவான காரணம் இருக்கும். அப்படிப்பட்டவர்களில் நாஞ்சில் சம்பத்தையும் சேர்க்க வேண்டும். காரணம் அவரது மொழி ஆளுமை, அதைக் கையாளும் அழகு. ஆனால் நாஞ்சில் சம்பத் இப்படி மாறிப் போய் விட்டாரே என்ற அதிர்ச்சியும், வருத்தமும் இன்னும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.
எப்படிப்பட்டவர் நாஞ்சில் சம்பத். தமிழ் இவரது நாவில் புகுந்து விளையாடும் அழகை ரசிக்காதவர் யாரேனும் உண்டா.. திமுகவில் இருந்த காலத்திலும் சரி, மதிமுகவில் இருந்த காலத்திலும் சரி, தனக்கென ஒரு இடம் கிடைக்காமல் அவதிப்பட்ட மிகச் சிறந்த பேச்சாளர் சம்பத்.
திமுகவில் இவரைத் தாண்டி பல தலைகள். சரி மதிமுகவுக்கு வந்தால் நிலைமை மாறும் என்று பார்த்தால் அங்கேயும் நீ்ண்ட கறுப்புத் துண்டுடன் நெடிய உருவமாக வைகோ குறுக்கே நின்றிருந்தார். இத்தனையையும் தாண்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் சம்பத்.
எங்கே அந்த சம்பத்
ஆனால் அதையும் தாண்டி மதிமுக மேடைகளில் வைகோவுக்கு நிகராக புலியெனப் பாய்ந்தவர், சிங்கமென கர்ஜித்தவர் நாஞ்சில் சம்பத். ஆனால் அந்த சம்பத்தின் நிலை.. மிக மிகப் பரிதாபமாக இருக்கிறது.
ஜெயலலிதாவிடம் போய்
மதிமுகவில் தன்னை ஓரம் கட்டி, ஒதுக்கி வெறுப்படித்தார்கள் என்பதால் அதிமுகவில் போய்ச் சேர்ந்தார் சம்பத். அவர் மீதான வழக்குகள் வாபஸாகின. கட்சிப் பணிக்காக காரையும் பெற்றார் சம்பத். இதனால் "இனிய தமிழ்" சம்பத் என்ற பெயர் போய் "இன்னோவா" சம்பத் என்ற அவப் பெயரையும் சம்பாதித்தார்.
மேடை தோறும் முழக்கம்
ஆனால் எதையும் கண்டு கொள்ளவில்லை சம்பத். அதிமுக மேடை தோறும் முழங்கினார். தனது எளிய, அருமையான தமிழ் பேச்சு மூலம் அதிமுக மேடைகளை அலங்கரித்தார். உற்சாகமாக வலம் வந்தார்.
சசிகலாவிடம் சரண்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் ஓ.பி.எஸ் பக்கம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்பவே அவரது பேச்சும் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் முதல் நாள் சசிகலாவை விமர்சித்து விட்டு சில மணி நேரங்களிலேயே அவரிடம் போய்ச் சரணடைந்து கும்பிடு போட்டு என்று அனைவரின் இகழ்ச்சிக்கும் உள்ளானார்.
தினகரனிடம் மண்டி
ஆனால் இப்போது அவர் தினகரன் துதி பாடி வருவதை பலரை வருத்தமடைய வைத்துள்ளது. திராவிடம் காக்க வந்த காலம் தந்த தலைவன் என்றெல்லாம் தினகரனை அவர் போற்றிப் பாடி புகழ்வது அனைவரையும் வருத்தமடைய வைத்துள்ளது. அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சம்பத்தா இப்படிப் பேசுவது என்று அனைவரும் விழி விரிய வருந்திக் கொண்டுள்ளனர்.
மானம் வேண்டாமா
எல்லாவற்றையும் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நேற்று சன் நியூஸ் சானலுக்கு அவர் அளித்த பேட்டி இருக்கிறதே.. உண்மையிலேயே பார்த்தவர்கள் பெரும் வேதனைக்குள்ளானார்கள். தான் அண்டியிருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டியதுதான். ஆனால் அதற்காக இப்படியா மானத்தை கழற்றி கக்கத்தில் வைத்துக் கொண்டு ஒருவர் வாழ்வார்?
செத்துருவேன்
தினகரனை விடாமல் புகழ்ந்து பேசிய சம்பத், ஓ.பன்னீர் செல்வத்திடம் போய் நிற்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு செத்துருவேன், தற்கொலை செய்து கொள்வேன், உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று ஆவேசமாக கூறியதைப் பார்த்து அத்தனை பேருமே அதிர்ந்து போய் விட்டனர்.
செத்துட்டோம்
இந்தப் பேட்டியைப் பார்த்து, உங்கள் மீதும், உங்கள் தமிழ்க் காதல் மீதும், உங்கள் தமிழ் ஆளுமை மீதும் கொஞ்சமாவது நம்பிக்கை வைத்திருந்தவர்கள்தான் உண்மையில் நேற்றே செத்துப் போய் விட்டார்கள் சம்பத்.