பூ மலரும் சத்தத்தைக் கூட "ரெக்கார்ட்" செய்யக் கூடிய திறமை "எங்கம்மா"வுக்கு இருக்கு.. நாஞ்சில் "நச்"!
மதுரை: பூவின் மொட்டு மலரும்போது ஒரு சத்தம் வரும். அந்த சத்தத்தைக் கூட பதிவு செய்யக் கூடிய திறமை எங்களது அம்மாவிடம் உண்டு என்று கூறியுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
மதுரையில் அதிமுக சார்பில் ஒரு பட்டிமன்றம் சமீபத்தில் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்பாட்டில் நடந்த இந்த பட்டிமன்றத்தில் நடுவராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலரும் கலந்து கொண்டு அம்மான்னா சும்மா இல்லடா என்று புகழ் பாடினர்.
அம்மாவின் வானளாவிய புகழுக்குக் காரணம் ஆட்சியின் மாட்சியா, ஆளுமைத் திறமா? என்பதுதான் இந்த பட்டி மன்றத்தின் தலைப்பு. சும்மா சொல்லக் கூடாது பட்டிமன்ற ராஜா போல மாறி அத்தனை பேரும் கலகலப்பை ஏற்படுத்தினர். அட, ஓ.பன்னீர் செல்வம் கூட குதாகலமாக பேசி குஜாலாக சிரிக்க வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஓ.பி.எஸ்..போட்ட போடு
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், புரட்சித் தலைவர் காலத்தில் 16 லட்சமாக இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக்கி சாதித்துக் காட்டியவர் எங்கள் அம்மா. அம்மாவைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கின்றன.
டீக்கடையே நடத்தியவன் நான்
ஒருவர், வீதி வீதியாக நடந்து வருகிறார். சைக்கிளில் சுற்றுகிறார். கடையில் டீ குடிக்கிறார். உங்களுக்கு டீ குடிக்கத்தான் தெரியும். டீக்கடையே நடத்தியவன் நான்.
கோவில் கோவிலாக போகிறார்
இன்னொருத்தர் தன் கட்சி எம்.எல்.ஏ-க்களை காப்பாற்ற ஷீரடி கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய் சத்தியம் வாங்குகிறார். இன்னொருத்தர் மகனுக்கு பேனா வாங்கிக் கொடுத்திருக்கிறார். முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து அந்தப் பேனாவில்தான் போடவேண்டுமாம். ஆனால், அந்தப் பேனாவில் மையே இல்லை.
அசைக்க முடியாது அசைக்க முடியாது
எங்களை எந்தக் கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது. பெண்களுக்கு 25 ஆயிரம் பணமும், தாலிக்குத் தங்கமும் கொடுக்கிறார். தங்கத்தை உற்பத்தி செய்கிற நாடுகளில்கூட இப்படியொரு திட்டம் இல்லை என்றார ஓ.பி.எஸ்.
நாஞ்சிலாரின் நச் பேச்சு
நாஞ்சில் சம்பத் பேச்சு நச்சென்று இருந்தது. தீர்ப்பை சொல்வதற்கு முன்பு தன் பங்குக்கு குடம் குடமாக கொட்டினார்.. அதாவது அம்மாவை வாய் நிறைய மனசு நிறைய வயிறு நிறைய புகழ்ந்து பேசினார்.
செல்வத்துள் எல்லாம் தலை
செல்வத்துள் செல்வம் ஓ.பன்னீர் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று ஆரம்பித்த அவர் அடுத்து நேரடியாக டாப் கியருக்குப் போய் விட்டார். கண்ணை மூடி.. வாயை வலித்து, கன்னம் குலுங்க காமெடி நடிகர் அசோகனின் முகபாவனைகளுடன் தெறிக்க விட்டார் சம்பத்.
கடகம் தர்மசங்கடம்
சம்பத் என்ன தீர்ப்புச் சொல்வான், வசமாக மாட்டிக்கொண்டான் என்று அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார். உண்மைதான், காலையில் பேப்பரை புரட்டியபோது கடகம் தர்மசங்கடம் எனப் போட்டிருந்தான். டாஸ்மாக் அரசியல் செய்தனர்; செல்போன் டவர் அரசியல் நடத்தினார்கள்; இப்போது வெள்ள அரசியல் நடத்துகிறார்கள். இவர்களின் அரசியல், வெள்ளத்தோடு அடித்துப் போய்விடும்.
மலட்டாறிலும் கூட தண்ணி ஓடுதுன்னா
அம்மாவின் ஆட்சியில் நல்ல மழை பொழிந்து கண்மாய்கள் எல்லாம் நிரம்பியுள்ளன. மலட்டாறிலும் தண்ணீர் ஓடுவது எல்லாம் அம்மாவின் ராசி. இந்த வெள்ளத்தில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் கருணாநிதி.
அரித்மேட்டிக் கணக்கு செல்லாது
திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி வந்துகொண்டிருக்கிறது என்கிற அரித்மேடிக் கணக்கை வைத்து அடுத்து நம்ம ஆட்சிதான் என கணக்குப் போட்டு வருகிறார் கருணாநிதி. அதை உடைத்து ஆறாவது முறையாக அம்மா முதல்வர் ஆவார்.
பூ மலரும் சத்தத்தையும்
பூவின் மொட்டு மலரும்போது ஒரு மெல்லிய சத்தம் வரும், இதை யாரும் கேட்டதில்லை. அதை ஒலிப்பதிவு செய்கிற ஆற்றல் அம்மாவுக்கு மட்டும்தான் உண்டு. கடல் அலைகளின் சத்தத்தின் அகராதி அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்டவரை யாராலும் வீழ்த்த முடியாது.
நீங்க புரோக்கர்..நாங்க சர்வீஸ்மேன்
திமுக ஒரு தரகுக் கடை. அதிமுக சர்வீஸ் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட கட்சி. பகைவனுக்கும் அருள்வாய் என்பதுபோல் எங்கள் அம்மா, கஷ்டம் என்று சொன்ன மு.க.முத்துவுக்கே அஞ்சு லட்சத்தைக் கொடுத்தவர். அடுத்து அழகிரிக்கும் கொடுக்க இருக்கிறார்.
மோடியே வெளிநாட்டுல இங்கிலீஷ் தெரியாம இந்தியில பேசிட்டு அலையுறாரு, ஆனா, அம்மா பேசுற இங்கிலீஷ் இந்தியாவுல எவனும் பேச முடியாது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு எங்கள் புரட்சித்தலைவி ஒரு பொய் வழக்கில் சிறையில் இருந்தபோது 234 பேர் உயிரைக் கொடுத்தார்கள். உலகத்தில் யாருக்காகவும் இப்படி உயிரை விட்டிருக்க மாட்டார்கள்.
எரிமலை..நீ பேச்சை நிறுத்து ஏழுமலை!
பூகம்பமே வந்தாலும் அசையாமல் இருக்கும் எரிமலை, எந்தப் புயல் மழையையும் பொறுத்துக்கொள்ளும் பூமி எங்கள் அம்மா. திரும்பும் திசையெல்லாம் அம்மாவின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. ஜெனீவாவில் இருக்கும் தமிழனும் எங்கள் தாயைத் தவிர, வேறு எந்த நாயையும் நம்புவதில்லை என கேப்பே இல்லாமல் வெளுத்துக் கட்டினார் நாஞ்சில் சம்பத்.