கார் வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: அமைச்சர் நாராயணசாமிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியின் வீடு அருகில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டு காரில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவருடைய வீட்டிற்கு இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஒதியன்சாலை போலீசாரும், இரண்டாம் அடுக்கில் ஐ.ஆர்.பி., போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் வீட்டிற்கு அருகில், தனியாக ஷெட் அமைத்து, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரின் பயண பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, சி.ஆர்.பி.எப்., என அழைக்கப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மத்திய ரிசர்வ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் மார்க்ஸ் தலைமையில், 13 பேர் அடங்கிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், புதுச்சேரி ஐ.ஆர்.பி., பிரிவு கமாண்டோ போலீஸ் படை வீரர் ஒருவரும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், நேற்று முதல், மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு உள்ள எல்லையம்மன் வீதியை தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரிக்கு வரும்பாதும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அமைச்சர் நாராயணசாமிக்கு புல்லர் புரூப் காரும் வழங்கப்பட்டுள்ளது.