மத்திய அமைச்சரவையில் அதிமுக? ஜெ. டெல்லி பயணத்தில் அதிரடி திருப்பம்?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவும் இடம்பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்ற ஜெயலலிதா இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை ஜெயலலிதா சந்திக்க உள்ளார்.
இச்சந்திப்பின் போது தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா கொடுக்க இருக்கிறார். இந்த கோரிக்கைகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துதல் உள்ளிட்டவை பிரதான அம்சங்களாக இருக்கும் என தெரிகிறது.
அத்துடன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டு காலம் சிறையில் வாடும் 7 தமிழர்களை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வது தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மோடியுடனான சந்திப்பில் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவை என ஜெயலலிதா கருதுகிறாராம். அதேபோல் 50 எம்.பி.க்களுடன் 3-வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக, அமைச்சரவையில் இணைந்தால் ராஜ்யசபாவில் மசோதாக்களை எளிதாக நிறைவேற்ற முடியும்; அடுத்த ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் எளிதாக வெல்வதற்கு உறுதுணையாக இருக்கும் என கணக்குப் போடுகிறதாம் பாஜக.
இதனால் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றுவிட்டு தமிழகம் திரும்பிய உடன், பாஜகவுடன் கூட்டணி; மத்திய அமைச்சரவையில் பங்கேற்பு அல்லது மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவரலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.