மானிய டீசலில் மாதந்தோறும் ரூ. 100 கோடி ஊழல்... சுனாமியாய் பொங்கும் தமிழக மீனவர்கள்!
சென்னை: மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசலில் மாதந்தோறும் ரூ.100 கோடி ஊழல் நடப்பதாக தமிழக மீனவர் சங்கத்தினர் பரபரப்புக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளனர்.
மீனவர் மக்கள் முன்னணி (அனைத்து மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு) தலைவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''மீனவர்களின் விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் 1,500 லிட்டர் டீசல் வீதம் 11 மாதங்களுக்கும், சிறு படகுகளுக்கு மாதம் 300 லிட்டர் வீதம் வருடம் முழுவதும் மீன்வளத்துறை சார்பு நிறுவனங்களான மீன் வளர்ச்சி கழகம், மாநில கூட்டுறவு இணையம் மூலம் அனுமதிக்கப்படுகிறது.
இதன் மூலம் வருடத்துக்கு விசை படகுகளுக்கு 7.5 கோடி லிட்டரும், சிறு படகுகளுக்கு 4 கோடி லிட்டரும் மானிய விலையில் டீசலை மத்திய-மாநில அரசுகள் வழங்குகிறது. இப்படி வழங்கப்படும் மானிய விலை டீசல் தனியார் வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், தனியார் எண்ணெய் நிலையங்களுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கள்ளத்தனமாக மொத்தமாக விற்பனை செயப்படுகிறது.
இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடைபெறுகிறது. இந்த மெகா மோசடியானது நன்கு திட்டமிடப்பட்ட குற்ற செயல் ஆகும். இது ஆவின் பால் கலப்பட ஊழலையே மிஞ்சுவதாக உள்ளது. இதில், தமிழக அரசு தனி கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.