14 லட்சம் வரி பாக்கிக்கு தண்டனை ... ஹோட்டல் முன் “குப்பை தொட்டி”யை வைத்த அதிகாரிகள்!
நெல்லை: நெல்லையில், ஒரு ஹோட்டல் நிர்வாகம், பல மாதங்கள் ஆகியும் பல லட்சம் ரூபாய் வரியைக் கட்டாமல் வைத்திருந்ததால் கடுப்பாகிப் போன மாநகராட்சி நிர்வாகம் அந்த ஹோட்டல் முன்பு பெரிய குப்பைத் தொட்டியை வைத்து விட்டது.
இதை கண்டு ஹோட்டல் நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
நெல்லை மாநகராட்சிக்கு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்பட பல வரிகள் மூலம் ரூபாய் 34 கோடிக்கு வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
வரி வசூல் ஜரூர்:
இந்த வரியை வசூலிக்க 4 மண்டலங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம் நடத்தப்படுகிறது. தஞ்சை மண்டலத்தில் நடந்த வரி வசூல் முகாமில் ஒரே நாளில் மட்டும் ரூபாய் 62 லட்சம் வரி வசூல் ஆகி உள்ளது.
14 லட்சம் வரி பாக்கி:
ஒரு சில வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் பல லட்சம் வரி பாக்கி வைத்துள்ளன. நெல்லை சந்திப்பு-மதுரை ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டல் ரூபாய் 14 லட்சம் வரி பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஹோட்டலுக்கு நோட்டீஸ்:
இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வரி வசூல் முகாமில் ஹோட்டல் நிர்வாகத்தினர் வரி பாக்கியை செலுத்தவில்லை.
இரவோடு இரவாக குப்பை தொட்டி:
இதை தொடர்ந்து இரவோடு இரவாக மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஹோட்டல் முன்பு குப்பை தொட்டியை வைத்தனர்.
ஜப்தி நடவடிக்கை கட்டாயம்:
வரி பாக்கி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியில் ஹோட்டல்:
இரவோடு இரவாக ஹோட்டல் வாசலில் குப்பை தொட்டி வந்ததால் ஹோட்டல் நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.