லைசென்ஸ் இல்லாமல் அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் - அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
நெல்லை: லைசென்ஸ் இல்லாமல் அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்ததால், பேருந்தில் பயணம் செய்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லையிலிருந்து நாகர்கோவில் மார்க்கத்தில் அரசு பஸ்கள் நிறைய இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பெரும்பாலானவை விதிமுறைகளுக்கு புறம்பாக புறவழிசாலை வழியாக செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் வினாயகம், மூன்றடைப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அணுகு சாலையில் செல்லாத 9 அரசு பஸ்களின் டிரைவர்களுக்கு அவர் மெமோ கொடுத்தார்.
அப்போது வள்ளியூரிலிருந்து நெல்லை சென்ற எண்ட் டூ எண்ட் பஸ்சை அதன் டிரைவர் சண்முகம் சாலையில் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் வினாயகம் சண்முகத்தை எச்சரிக்கை செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் சண்முகம் வாக்கு வாதம் செய்தார். ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்குமாறு கேட்டபோது அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லாததும் தெரிய வந்தது.
வினாயகம் அவரை கண்டிக்கவே ஆத்திரமடைந்த சண்முகம் பஸ்சை நடுரோட்டில் குறுக்காக நிறுத்தி போராடப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு ஆய்வாளருக்கு ஆதரவாக பேசினர்.
டிரைவர் சண்முகம், கண்டக்டர் பாஸ்கரன் ஆகிய இருவருக்கும் அபராதத்தை விதித்ததுடன் அவர்களது உரிமத்தை ரத்து செய்யவும் வினாயகம் பரிந்துரைத்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிரைவர் லைசென்ஸ் இல்லாமல் பஸ்சை ஓட்டி வந்ததால் அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.












Click it and Unblock the Notifications