மேகி நூடுல்ஸ்க்கு தமிழகத்திலும் தடை? ஆய்வு முடிவுகளுக்குப் பின் முடிவு
சென்னை: கேரள அரசைத் தொடர்ந்து மேகி நூடுல்சுக்கு தடைவிதிக்க பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து வருகின்றன. தமிழக அரசு மேற்கொண்ட பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்திலும் மேகி நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் 5.2 பில்லியன் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. மேகி நூடுல்ஸ்சில் ஆபத்தான வேதிப்பொருள் கலந்திருப்பதாக எழுந்துள்ள தகவலையடுத்து அதனை பயன்படுத்துவது குறித்து தமிழகத்திலும் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனால் மேகி நூடுல்ஸ் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மேகி நூடுல்ஸ் தரம் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட சோதனை முடிவு இந்த வார இறுதியில் வெளியாகும் எனத் தகவல்கள் கூறுகின்றன. மேகி நூடுல்சுக்கு தடைவிதிப்பது குறித்து ஆராய்வதற்காக மேற்கு வங்க அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
விஷமாகும் சுவை
நூடுல்சை தயாரித்த சில நொடிகளுக்குள்ளேயே அதை சட்டென்று காலி செய்து விடுவார்கள் குட்டீஸ்கள். காரணம் அதன் சுவைதான். நூடுல்சில் சுவையை அதிகரிக்க செய்ய "எம்.எஸ்.ஜி." என்று அழைக்கப்படும் "மோனோ சோடியம் குளுட்டாமேட்" என்ற ரசாயனப் பொருள் சேர்க்கப்படுகிறது. இது ஈயம் ஆகும். இது உடலில் சேரும் போது, பல்வேறு நோய்களை ஏற்படுத்தி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேகி நூடுல்ஸ்
2 நிமிடம்தான் சட்டுன்னு தயாரித்து விடலாம் என்பதுதான் நூடுல்ஸ் மீது மக்களின் ஈர்ப்பு அதிகரிக்கக் காரணம். எத்தனையோ நூடுல்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும் சந்தையில் அதிகம் விற்பனையாவது நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் "மேகி நூடுல்ஸ்"தான். காரணம் ஊடகங்களில் கொடுக்கப்படும் அதீத விளம்பரங்களினால் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக விற்பனையாகும் உணவுப்பொருளாக உள்ளது.
நூடுல்ஸ் சத்தானதா?
நூடுல்சில் கால்சியம், புரதம், நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் நூடுல்சில் இவை மிக, மிக குறைந்த அளவே உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சமீப காலமாக நூடுல்ஸ் வகை உணவுப்பொருட்கள் பாதுகாப்பானது அல்ல என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
மேகி நூடுல்ஸ் சர்ச்சை
உத்தரபிரதேசம், பீகார், உள்ளிட்ட மாநிலங்களில் நூடுல்ஸ் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ததால் மேகி நூடுல்ஸை சோதிக்க அம்மாநில அரசுகள் உத்தரவிட்டன. அப்போது மேகி நூடுல்சில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரசயானப் பொருள் கலவை சேர்க்கப்படுவது தெரியவந்தது. இது நாடெங்கும் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருள் மீது அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
கேரளா அரசு தடை
இதைத் தொடர்ந்து பெரும்பாலான மாநில அரசுகள் மேகி நூடுல்சை சோதிக்க உத்தரவிட்டுள்ளன. கேரள மாநில அரசு மேகி நூடுல்சை விற்க தடை விதித்துள்ளது.
எட்டு மாநிலங்களில் ஆய்வு
மேகி நூடுல்ஸ் அதிக அளவில் விற்பனையாகும் ஹரியானா, ஒடிஷா, உத்தரகாண்ட், குஜராத், பீகார், பஞ்சாப், அஸ்ஸாம், தமிழகம் ஆகிய எட்டு மாநிலங்களில் அதன் தரம் குறித்து பரிசோதிக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆய்வகங்களில் பரிசோதனை
இதனையடுத்து தமிழக அரசும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி 32 மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை மாதிரிகளாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சேகரித்துள்ளனர்.
பரிசோதனைக்குப்பின் முடிவு
அந்த மாதிரி மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுக்கள் சென்னை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, மதுரை ஆகிய 6 இடங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு மேகி நூடுல்சில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.
மேகிக்கு தடை வருமா?
6 பரிசோதனைக் கூடங்களில் நடந்து வரும் ஆய்வுகள் தொடர்பான முடிவு இன்று பிற்பகல் தொடங்கி நாளைக்குள் தெரிந்து விடும். தமிழக அரசிடம் அந்த பரிசோதனை முடிவுகள் அறிக்கையாக கொடுக்கப்படும். எனவே தமிழ்நாட்டில் மேகி நூடுல்ஸ் விற்பதற்கு தடை வருமா, இல்லையா என்பது இன்று அல்லது நாளை தெரிந்து விடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இந்த வார இறுதியில் தான் இது குறித்த முடிவை தமிழக அரசு வெளியிடும் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பில்லையாம்
இதற்கிடையே தற்போது தமிழ்நாட்டில் மேகி நூடுல்ஸ் விற்பனையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்களில் வழக்கம் போல மேகி நூடுல்ஸ் விற்பனை நடந்தது என்று தெரிய வந்துள்ளது.
சுவைக்கு அடிமை
மேகி நூடுல்ஸ் சுவைக்கு அடிமையானவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து சென்னையில் குடியேறி இருப்பவர்கள் தொடர்ந்து நூடுல்ஸ் உணவுப் பொருளை வாங்கி வருவதாக சூப்பர் மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஜராக சம்மன்
இதனிடையே மேகி நூடுல்ஸை பாதுகாப்பற்றது என ஏற்கனவே அறிவித்துள்ள டெல்லி அரசு அதனை தயாரிக்கும் நெஸ்லே நிறுவன அதிகாரிகள் இன்று நடக்க உள்ள விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.