அதிமுக உடைந்து எம்.ஜி.ஆர். அதிமுக என்ற புதிய கட்சி உருவாகும்: பிரேமலதா பேச்சு
சென்னை: அதிமுக உடைந்து எம்.ஜி.ஆர். அதிமுக என்ற புதிய கட்சி உருவாகும் என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், அதிமுக ஆட்சி சாதனை ஆட்சி என்று பிரம்மையை உருவாக்குகிறார்கள். ஜெயலலிதா போலீஸ், பத்திரிக்கை, பன்னீர் செல்வம் 3 ‘பி' வைத்து ஆட்சி செய்கிறார். 110 விதி, 144 என்று நம்பர்களை வைத்து ஆட்சி செய்கிறார்.
மக்களை வறுமையில் வைத்திருந்தே அதிமுக ஆட்சி நடத்துகிறது. வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று கேப்டன் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஜெயலலிதா நம்பரை போட்டு திட்டங்களை அறிவித்ததால் மக்கள் அதிமுக அரசுக்கு 'ஜீரோ' போட்டு வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள்.
விஜயகாந்த் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதற்கு முன், ஜெயலலிதா 234 தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா? இதை சவாலாகவே விடுக்கிறேன்.தேர்தல் வந்தவுடன் ராஜிவ்காந்தி வழக்கு 7 பேரின் விடுதலை விவகாரத்தை கையில் எடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார் ஜெயலலிதா. நான்கரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார்?.
காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு, மீனவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், கச்சத் தீவு உள்ளிட்ட எந்த பிரச்சினைக்கும் ஜெயலலிதா தீர்வு காணவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிக்கையாளர்களை வாரம் ஒருமுறை சந்திப்பேன் என்று கூறிய ஜெயலலிதா, தற்போது 5 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத முதல்வராக ஜெயலலிதா உள்ளார்.
தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக வெளியாகும் கருத்து கணிப்புகள் தவறானவை. சட்டமன்றத் தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாகவே உள்ளன. எந்த பேரத்திற்கும் படியாதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். மக்கள் பார்த்து வாக்களித்தால் தான் முதலமைச்சர். நெஞ்சம் நிமிர்த்தி நேர் கொண்ட நடை இவைதான் ஆண்களின் கம்பீரம். ஆனால் அதிமுக அமைச்சர்களை முதுகெலும்பு இல்லாதவர்களாக மாற்றி இருக்கிறார் ஜெயலலிதா.
எவ்வளவு நாள் தான் அடிமையாக இருப்பது என்று நினைத்த அமைச்சர்கள் நிமிர்ந்திடு தலைவா குனிந்தது போதும் என்ற வாசகத்துடன் புதிய கட்சியாக அதிமுக உடைந்து எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சி உருவாகும் என பிரேமலதா பேசினார்.