புத்தாண்டு கொண்டாட்டங்கள்: மெரினா சாலையில் போக்குவரத்துக்கு தடை!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று (புதன்கிழமை) இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* இன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை காமராஜர் சாலையில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* இன்று இரவு 9 மணிக்கு மேல் கடற்கரை உட்புற சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.
* கடற்கரை காமராஜர் சாலையில் சாந்தோம் கிறிஸ்தவ ஆலயம் முதல், போர் நினைவுச்சின்னம் வரையிலும், இரவு 9 மணிமுதல் நள்ளிரவு 2 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும்.
* காமராஜர் சாலையில் இணையும் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, லாயிட்ஸ் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரர் கோவில் தெரு ஆகிய சாலைகள் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. வாகனங்களில் வரும் பொதுமக்கள், தீவுத்திடல், சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை, லாயிட்ஸ் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காரணீஸ்வரர் கோவில் தெரு ஆகிய இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணிவரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.
* பார்த்தசாரதி கோவிலுக்கு பெசன்ட்ரோடு, திருவல்லிக்கேணி சாலை சந்திப்பு வழியாக வரும் பக்தர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சிங்கராச்சாரி சாலை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி முதல் ஐஸ்அவுஸ் காவல் நிலையம் அருகில் பெசன்ட் சாலை வழியாக, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
* புத்தாண்டையொட்டி சாந்தோம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு நள்ளிரவு ஜெபவழிபாட்டிற்கு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வருபவர்கள் காரணீஸ்வரர் கோவில் தெரு மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் வந்து, செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு போகலாம்.
* லஸ் சந்திப்பில் இருந்து சாந்தோம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவர்கள், தங்களது வாகனங்களை கச்சேரி சாலையில் உள்ள செயின்ட் ரபேல்ஸ் பள்ளி மைதானத்தில் நிறுத்தி விட்டு போகலாம். அடையாறில் இருந்து, தெற்கு கூவம் சாலை வழியாக வருபவர்கள் சாந்தோம் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு போகலாம். தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு செல்பவர்களுக்கும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.