விதிப்படி அமர்நாத் மாற்றப்பட்டார்.. இதிலென்ன தவறு.. ஏன் போராடுகிறார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்
முறைப்படித்தான் அமர்நாத் கீழடியில் இருந்து மாற்றப்பட்டார் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதனை தமிழ் அமைப்புகள் அரசியலாக்கப் பார்க்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை; சிவகங்கை மாவட்டம் தமிழர்களின் வரலாற்றை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த கீழடி அகழாய்வு பகுதியை மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் பார்வையிட சென்றனர். அவர்களுக்கு அங்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் தமிழ் தேசம் அமைப்பினர் தெரிவித்தனர்.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது
இந்த ஆய்வுப் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தியது. மேலும், அதற்கு மேற்கொண்டு ஆகும் செலவிற்கான பணத்தையும் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதைவிட மோசமாக அந்த ஆய்வுன் தலைவர் அமர்நாத்தை இடமாற்றம் செய்தது.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில், இந்த இடத்தை பார்வையிட வந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். திரும்பிப் போ என்று முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாற்றுவது விதி
நாங்கள் அமர்நாத்தை மட்டும் மாற்றவில்லை. இந்தப் பணியில் இருந்து 26 பேரையும் மாற்றியுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கும் அதிகாரி மாற்றுவது விதி. இது வழக்கமான ஒன்று. அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்.
என்ன கிடைக்கும்?
அந்த இடத்திற்கு இன்னொருவரை போட்டிருக்கிறோம். அவரும் தமிழை புரிந்து கொள்பவர்தான். கீழடியில் கிடைக்கப் போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது. அகழ்வாய்வு முடிவதற்கு முன்பே மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அரசியல் நோக்கு
இதில், ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கோடு இதனை எதிர்க்கிறார்கள். ஆனால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு நடைபெற உள்ளது. இங்கு கிடைக்கிற பொருட்கள் சில சென்னையில் வைக்கின்றனர். சிலதை தமிழகத்தில் உள்ள வேறு இடத்தில் வைக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் தமிழகத்தில்தானே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.