என்.எல்.சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழகத்தில் தொழில் அமைதியை பாதுகாக்கவும், தங்குதடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தவும் வசதியாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தில், பிரதமர் உடனடியாக தலையிட்டு சுமூகத் தீர்வுகாண வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
என்.எல்.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 20ம் தேதியிலிருந்து திருப்திகரமான ஊதிய மாற்று ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்தக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குவதில் என்.எல்.சி. முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதும், என்.எல்.சி. நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சுமார் 1,450 மெகா வாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைப்பதும் பிரதமருக்கு தெரியும்.
என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஊதிய உடன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என தாம் அறிவதாகவும், ஆனால், 2014ம் ஆண்டு ஜுன் மாதம் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை ஊதிய உடன்பாடு ஏற்படவில்லை.
என்.எல்.சி. நிறுவனம், லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனம். எனவே, தமிழகத்தின் தொழில் அமைதியை பாதுகாக்கவும், தங்கு தடையற்ற மின் விநியோகத்தை பராமரிக்கவும் வசதியாக, என்.எல்.சி. தொழிலாளர்களின் குறைகளை உடனடியாக ஆய்வு செய்து, பிரச்னைக்கு விரைவில் சுமூகத் தீர்வுகாணுமாறு பிரதமர், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.