ஈழத் தமிழர் பிரச்சனையில் தெளிவில்லாத ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தேர்தல் அறிக்கையானது கூடங்குளம் அணு உலைகள், மீனவர்கள், ஈழத் தமிழர் பிரச்சனைகளில் தெளிவற்ற குழப்பமான, போராடும் மக்களுக்கு எதிரான நிலைகளையே வெளிப்படுத்தியிருக்கிறது.
ஊழலை ஒழிக்க புறப்பட்ட இயக்கமாகத்தான் உருவெடுத்தது ஆம் ஆத்மி கட்சி.. நாடு முழுவதும் அதன் மீது நம்பிக்கை அதிகரிக்க.. அதன் கொள்கையும் விரிவடைய வேண்டிய அவசியம் உருவானது.
இதனால்தான் கூடங்குளம் அணு உலைகளை இழுத்து மூடும் வரை போராடுவோம் என்று அறிவித்து பல ஆண்டுகள் போராட்டம் நடத்திய சுப.உதயகுமாரன் உள்ளிட்டோரை வேட்பாளர்களாகவே அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பிற அரசியல் கட்சிகளிடத்தில் இருக்கும் தெளிவான நிலைப்பாடு எதுவும் இல்லாமல் படுகுழப்பமான நிலைப்பாடுதான் வெளிப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பகுதியில், கடந்த காலங்களில் அரசு மறந்த, மாற்று எரிசக்தி உற்பத்தி வழிகளை மேம்படுத்துதல், அணு உலையை செயலிழக்கச் செய்ய ஆகும் செலவு அதனை உருவாக்கும் செலவை விட அதிகம். அரசாங்கமும், கடந்த காலங்களில் மக்களின் கருத்தை இதுவரை முழுமையாக கேட்கவில்லை. அவர்கள் கருத்தை மக்கள் பாதுகாப்பில் இருக்கும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து(த) பிறகுதான் "ஆரம்பிக்க" வேண்டும். நடுநிலையான, நியாயமான தேசிய அளவில் அணுசக்தியைப் பற்றி பல விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறைகளை நிவர்த்தி செய்து "ஆரம்பிக்க"
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தமிழினமே அழிந்து போய்விடும் என்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார் ஆம் ஆத்மியின் இப்போதைய வேட்பாளர் சுப. உதயகுமார். ஆனால் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையோ " மக்கள் பாதுகாப்பில் இருக்கும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்த பிறகுதான் "ஆரம்பிக்க" வேண்டும் என்கிறது. அப்படியானால் கூடங்குளம் அணு உலை இருக்க வேண்டும்- பாதுகாப்பு அம்சங்களுடன் என்பதுதான் ஆம் ஆத்மியின் நிலைப்பாடோ என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அத்துடன் அணுசக்தியே கூடாது என்கிற கூடங்குளம் போராட்டக் குழுவின் கோரிக்கையை நிராகரித்து "அணுசக்தி" பற்றி நடுநிலையான, நியாயமான விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என்ற எதிரான ஒருநிலையை ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை முன்வைக்கிறது.
தமிழக மீனவர் பிரச்சனை..
ஆம் ஆத்மியின் ஆங்கில தேர்தல் அறிக்கையில், "தவறுதலாக அடையாளப்படுத்தப்பட்டு" மீனவர்கள் சுடப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டதுடன் இலங்கை- இந்திய கூட்டு ரோந்தையும் வலியுறுத்தியது. இது சர்ச்சையை ஏற்படுத்தவே தமிழில் அறிக்கையை வெளியிடுவோம் என்று ஜால்ஜால்ப்பு சொன்னார்கள்.. தமிழில் என்ன சொல்லி இருக்கிறது ஆம் ஆத்மி.
இலங்கையுடனான "மீனவப் பிரச்சனை" கொள்கை
மீனவர் பிரச்சனை இல்லை என்றில்லாமல் மீனவப் பிரச்சனை என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கையுடன் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு ஏற்படுத்திய "இந்திய" மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் (தமிழக மீனவர் என குறிப்பிடவில்லை). மீனவர் வாழ்வாதாரத்திற்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் எல்லோரையும் விடுவித்து உடனடியாக அவர்களால் பறிக்கப்பட்ட படகு, வலை போன்றவற்றை உடனடியாக திருப்பித்தர இலங்கை அரசுக்கு அழுத்தம் தரப்படும்.. சரி கச்சத்தீவு பற்றி என்ன சொல்கிறது
கச்சத்தீவு
கச்சத்தீவு தண்ணீர் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான உரிமைகள் பெற சட்டம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வழிகள் மேற்கொள்ளப்படும் என்ற ஒற்றைவரித்தான் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள உரிமை. கச்சத்தீவே இலங்கைக்குச் சொந்தமானது என்கிறது மத்திய அரசு. கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமானது.. அதை மீட்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் ஆம் ஆத்மி வேண்டா வெறுப்பாக போனால் போகிறதென்று ஒற்றை வரியை கச்சத்தீவு என்று கடனுக்கு சேர்த்துவிட்டிருக்கிறது.
ஈழத் தமிழர் வார்த்தையே இல்லை
ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் என்ற ஒரு வார்த்தை கூட "இலங்கையுடனான உறவு" என்ற தலைப்பில் இல்லை. அதன் கொள்கை என்னவென்று சொல்லப்படுகிறது... "அண்டை நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துதல்" என்பதுதானாம்.
அப்பாவி பொதுமக்கள்..
அத்துடன், இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவி பொதுமக்கள் (தமிழர்கள் என்று சொல்லப்படவில்லை) மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் விதி மீறல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் அல்லது அதற்கு சர்வதேச குழு விசாரிக்க வேண்டும் என்கிறது. போரிலே ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.. அது ஒரு இனப்படுகொலை என்று ஒட்டுமொத்த தமிழகமே கதறுகிறது.. தமிழக சட்டசபை தீர்மானமும் சொல்கிறது. .ஆனால் எளிய மக்கள் என்கிற் ஆம் ஆத்மி பார்வையில் அந்த தமிழர்கள் அப்பாவி பொதுமக்கள் என்ற வரையறுக்குள்தான் வருகிறார்கள்.. போர்க்குற்றம் என்ற சொல்லைக் கூட பகிரங்மாக பயன்படுத்த துப்பில்லாமல் போர் விதி மீறல் என்று இந்திய மத்திய அரசு பாணியிலேயே பேசுகிறது ஆம் ஆத்மி அறிக்கை.
13 வது ஷரத்து..
மேலும் "அதிகார பகிர்வை அளிக்கும் 13வது ஷரத்தை அமல்படுத்த இலங்கை அரசை நிர்பந்தித்தல்" இது ஈழத் தமிழனுக்கா? சிங்களவனுக்கா? மலையகத் தமிழனுக்கா? என்றெல்லாம் சொல்லப்படவில்லை. ராஜிவ் காந்தி காலத்திலேயே புதைக்கப்பட்டுவிட்டது 13வது அரசியல் திருத்தம். அது மலையேறிப் போய் புல்முளைத்து தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை தமிழகம் கோருகிறது.. தமிழக சட்டசபை கேட்கிறது.. உலக நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் கோருகிறார்கள்.. ஆம் ஆத்மியின் கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த வேட்பாளர்களும் கேட்கிறார்கள்.. இவர்கள் மட்டும் இன்னமும் டெல்லிவாலாக்களைப் போல 13வது ஷரத்தை மட்டும் கதையளந்து கொண்டிருக்கிறார்கள்..
அகதிகள் விவகாரம்
அதேபோல் இந்தியாவில் வாழும் "இலங்கை அகதிகளுக்கு" (அவர்கள் தமிழர்கள் இல்லை போல) அனைத்து உரிமைகளும் கொடுத்து மீண்டும் அவர்கள் "நாடு" திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தல், இந்திய குடியுரிமை வழங்கல், நாடு திரும்ப விரும்பும் மக்களுக்கு அதற்கான சரியான நடவடிக்கைகள் எடுத்தல் ஆகியவைதான் ஆத்மியின் திட்டங்களாம். இந்தியாவில் சுய நிர்ணய உரிமை பெற்றவர்களாக சுகபோகத்துடன் வாழும் திபெத்திய அகதிகளுக்கான உரிமைகளைக் கோரவில்லை.. அடிப்படை வாழும் மனித உரிமைகளைத்தான் ஈழத் தமிழ் அகதிகள் கோருகின்றனர். அதைப் பற்றி பேசவக்கில்லாமல் டெல்லி வெளியுறவு அமைச்சகத்தின் குரலாக சொத்தைவாதம் பேசுகிறது ஆம் ஆத்மி
கெயில் திட்டம்
விளைநிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய்களை பதிக்கவே கூடாது என்பது தமிழக "எளிய மக்களாகிய" விவசாயிகளின் கோரிக்கை ஆனால் அந்த எளிய மக்கள் அதாவது ஆம் ஆத்மிகளுக்காக கட்சியோ, அப்படியெல்லாம் ஒரு கோரிக்கையை சட்டென உணர்ச்சிவசப்பட்டு வைத்துவிடவில்லை. ஒரு குழு அமைக்க வேண்டுமாம்.. அக்குழு அறிக்கை சமர்பிக்க வேண்டுமாம்.. அதன் பின்னரும் விவசாயிகள் ஏற்கவில்லை எனில் கைவிட வேண்டுமாம்.. எந்த லோகத்தில் ஆம் ஆத்மியினர் இருக்கிறார்கள்? விளைநிலம் வழியே எரிவாயு குழாய் அமைக்காதே என்பதுதான் தமிழகத்தின் நிலை.. இதைவிடுத்து என்ன குழப்பமான நிலைப்பாடோ?
என்னாச்சு தாது மணல் கொள்ளை?
சென்னையில் செய்தியாளர்கள் கூட்டம் போட்டு தாது மணல் கொள்ளை பற்றி பேசுகிறது ஆம் ஆத்மி. இந்தியாவை உலுக்கிய பல லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரத்தைவிட 720 மடங்கு கொள்ளை லாபம் அடைந்திருப்பதாக சொல்கிறது ஆம் ஆத்மி.. எங்கே தேர்தல் அறிக்கையின் பக்கங்களில் காணவில்லையே?
சேதுக்கால்வாய் திட்டம்?
தமிழகத்தின் பிரதான பிரச்சனைகளில் சேதுக்கால்வாய் திட்டமும் ஒன்று.. அது பற்றி என்ன நிலைப்பாடு என்பதை ஆம் ஆத்மி சொல்லவே இல்லை.. ஏதோ கடனுக்கு தமிழகத்துக்கு என தனி தேர்தல் அறிக்கை.. இந்த அறிக்கை ஆம் ஆத்மி வேட்பாளர்களாக களத்தில் இருக்கும் கூடங்குளம் போராட்டக் குழுவினரோ அல்லது ஜனநாயகப் போராட்டங்களுக்கான ஆதரவாளர் என்கிற மூத்த பத்திரிகையாளர் ஞாநியோ என்பதை சுட்டிக்காட்டவில்லையே ஏன்? ஏன்? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வி
பலே என்.ஜி.ஓ. அறிக்கை
மக்களை ஆதரிக்கிற மாதிரி ஆதரித்துக் கொண்டு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் என்.ஜி.ஓ.க்களின் பாணி. அப்படி செய்தால்தான் அவர்களுக்கான வெளிநாட்டு நிதி கிடைப்பதில் சிக்கல் இருக்காது. அதை ஒன்றை மட்டுமே மிகச் சரியாக மிகத் தெள்ளத் தெளிவாக கடைபிடித்திருக்கிறது ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்களே படியுங்கள்
இதோ ஆம் ஆத்மியின் கடனுக்கு வெளியிட்டிருக்கும் தமிழக தேர்தல் அறிக்கை: