ரஜினி மீதான சாமியின் தாக்குதல் பேச்சு.. தமிழிசையால் பதில் சொல்ல முடியாதாம்!
ரஜினிகாந்த் தமிழரே அல்ல என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியது பற்றி தன்னால் பதில் ஏதும் சொல்ல முடியாது என்று தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் தமிழரே அல்ல என்று பாஜக வைச் சேர்ந்த சுப்பிரணியன் சுவாமி கூறியுள்ளது குறித்து பதிலளிக்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மறுத்து விட்டார்.
எந்த ஒரு கொள்கையுமே இல்லாத மராத்தியரான ரஜினி தமிழகத்தில் அரசியலில் நுழைந்தால் தோல்விதான் கிடைக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ரஜினிகாந்த்தை கடுமையாக தாக்கியிருந்தார். ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அரசியல் தொடர்பாக ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, "ரஜினிகாந்த் ஒரு தமிழரே அல்ல. அவர் கர்நாடகாவில் இருந்து வந்த மராத்தியர். ரஜினிகாந்துக்கு எந்த ஒரு கொள்கையுமே இல்லை" என்று தாக்கியிருந்தார்.

தோல்வி நிச்சயம்
மேலும், ரஜினிக்கு தற்போது அரசியல் குறித்த தடுமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தோல்வியைத்தான் தழுவ நேரிடும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

பாஜக கடுப்பு
ரஜினிகாந்த்தை அரசியலுக்கு எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழகத்தில் கால் ஊன்றிவிட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் பாஜகவினருக்கு சு. சுவாமியின் ரஜினி பற்றிய கமெண்ட் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை மறுப்பு
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி ரஜினிகாந்த் குறித்து பேசிய பேச்சு பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, இதற்கெல்லலாம் தன்னால் பதில் சொல்ல முடியாது என்று தமிழிசை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

சகஜம்
பாஜகவில் ஒருவர் ஒரு கருத்தை சொல்வதும், இன்னொரு தலைவர் அதனை மறுத்து கருத்து சொல்வதும், மற்றொரு தலைவர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொல்வதும் சகஜம்தானே. இதில் என்ன புதிதாக இருக்கிறது? தேவைப்படும் போது தேவையானதை முடித்துவிடுவார்கள் பாஜகவினர் என்பதுதானே வரலாறு.












Click it and Unblock the Notifications