அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தல்.. காங்கிரஸ் போட்டியிடாது.. திருநாவுக்கரசர்
சென்னை: அடுத்த மாதம் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
232 தொகுதிகளில் மட்டும் கடந்த மே மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சியிலும், தஞ்சையிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் இங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவான சீனிவேல் மரணமடைந்ததார். அதனால் அந்த இடமும் காலியானது.
இதனையடுத்து, கடந்த 17ம் தேதி, அரவக்குறிச்சியிலும், தஞ்சையிலும் தேர்தலும், திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தலும் வரும் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி சென்று சென்னை திரும்பிய காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலுமே கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. அவை மூன்றிலுமே திமுகதான் போட்டியிட்டது. அதே போன்று புதுச்சேரியில் நெல்லிக்குப்பம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இந்த முறையே இந்த தேர்தலின் போதும் பின்பற்றப்படும்.
இதுதொடர்பாக நாளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும். அப்போது எடுக்கப்படும் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
நடைபெற இருக்கும் தேர்தலில் திமுக வேட்பாளருக்காக காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.