புதுக் கட்சி தொடங்கும் ஐடியாவெல்லாம் இல்லை!- முக அழகிரி
சென்னை: தனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை என்று முக அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலருமான முக அழகிரி, பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை வரும் 17-ந் தேதி மதுரையில் கூட்டி இருக்கிறார்.

டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய அவர், சென்னையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திடீரென சந்தித்தார்.
நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடந்ததாக மு.க.அழகிரி தெரிவித்தார். நேற்று மாலை வடசென்னை முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபுவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் மு.க.அழகிரி நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், "நான் அரசியல் ரீதியாக யாரையும் சந்தித்து பேசவில்லை. நட்பு ரீதியாகவும் நலம் விரும்பி என்ற முறையிலும் நேரில் பார்த்து பேசுகிறேன்.
நான் தி.மு.க.வில் இருந்து செயல்படுவேன். தனிக் கட்சி தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை 17-ந்தேதி கூட்டி இருக்கிறேன்.
அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன்.
திமுகவுக்கு எதிராக நான் செயல்படுவேன் என்று யாரும் எதிர்ப்பார்க்க வேண்டாம். ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. வெற்றி பெறும். யாருடனும் கூட்டணி வைக்க தேவையில்லை," என்றார்.
முன்னதாக பெரம்பூர் வந்த மு.க.அழகிரிக்கு பெரம்பூரில் வி.எஸ்.பாபு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சால்வை அணிவித்தனர். வி.எஸ்.பாபு அவருக்கு பொன்னாடை அணிவித்தார்.
மு.க.அழகிரி சந்திப்பு குறித்து வி.எஸ்.பாபு கூறுகையில், "எனக்கு கண் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதை கேள்விப்பட்டு மு.க.அழகிரி என்னை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை," என்றார்.












Click it and Unblock the Notifications