நாளை மறுநாள் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: சீமான் அறிவிப்பு
சென்னை : இலங்கையில் நடைபெறவுள்ள ராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகே நாளை மறுநாள் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இனவெறிக் கொடூரம் நிகழ்த்திய சிங்கள அரசு எதிர் வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் ராணுவக் கருத்தரங்கை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இந்தியத் தலைவர்களுக்கும் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கும் சிங்கள அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்களின் குரல்வளையை நெரித்தும் தமிழக மீனவர்களை வேட்டையாடியும் தன் அரக்கத்தனத்தைக் காட்டிவரும் சிங்கள ராணுவம் ஈழப் போர் நிகழ்ந்தபோது நடத்திய மனிதாபிமானமற்ற இனவெறிக் கொடூரத்தை எவராலும் மறக்க முடியாது.
இதை மறைக்கும் விதமாகவும் தங்களுக்குத் தாங்களே புகழ் பாடும் விதமாகவும் இராணுவக் கருத்தரங்கை நடத்தி முழுப்பூசணியையும் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது சிங்கள அரசு.
இத்தகைய கொடூரங்களும் கொடுமைகளும் போதாது என நினைத்து இந்தியப் பிரதமரையும் எட்டு கோடி தமிழ் மக்களின் முதல்வராக விளங்கும் தமிழக முதலமைச்சரையும் கேலிச்சித்திரமாக்கி தங்களின் ராணுவ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். மாபலம் பொருந்திய இந்திய தேசத்தையே இழிவுபடுத்தும் ஈனச் செயல் அல்லவா இது? வெறுமனே மன்னிப்பு கேட்பதால் இந்த மாபெரும் கேவலம் மறக்கப்பட்டு விடுமா?
இந்தக் கேலிச்சித்திர அசிங்கத்தையும் இலங்கை அரசு மீது இனவெறி நடவடிக்கைகள் தொடங்கியிருக்கும் நிகழ்வையும் சொல்லி சிங்கள ராணுவக் கருத்தரங்கில் கலந்து கொள்ளக் கூடாது. மீறி எவரேனும் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டால் அது இந்த தேசத்தையும் ஒவ்வொரு தமிழர்களின் உணர்வுகளையும் மிதிக்கும் செயலாகவே இருக்கும்.
சிங்கள அரசின் ராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 17ம் தேதி சென்னை லயோலா கல்லூரி அருகே இருக்கும் இலங்கை தூதரகத்தை முற்றுக்கையிடும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்த இருக்கிறது.
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.