1200 அரசுப்பள்ளிகளை மூடப்போவதில்லை...: பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா
சென்னை: தமிழகத்தில், 1,200 தொடக்கப் பள்ளிகள் மூடப்படவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா கூறியுள்ளார். தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. இச்செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பள்ளிகளை மூடுவதா?
மாணவர்கள் போதிய அளவில் இல்லை என்பதற்காக பள்ளிகளை மூடுவது பொறுப்பற்ற செயலாகும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளும் மூடப்பட்டு, தனியார் பள்ளிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும். இது மிகவும் ஆபத்தானதாகும். எனவே, மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி, 1200 பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கருணாநிதி அறிக்கை
1,200 அரசுப் பள்ளிகளை தமிழகம் முழுவதும் மூடுவதென்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்று செய்தி வெளிவந்துள்ளது. தனியார் பள்ளிகளும், சுயநிதிப் பள்ளிகளும் அதிக அளவில் ஆதாயம் பெற வேண்டுமென்பதற்காக அ.தி.மு.க. அரசு 1200 பள்ளிகளை இழுத்து மூட முடிவு செய்திருக்கிறதா என்ற முக்கியமான கேள்வி சமூக முன்னேற்றத்தில் ஆர்வம் உடையோர் மத்தியில் எழுந்துள்ளது என்று கருணாநிதி கூறியிருந்தார்.
பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா கூறியுள்ளார். 1,200 தொடக்க பள்ளிகளை மூடப்போவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றது என்றும் சபிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications