என் உயிருக்கு ஆபத்து.. எச்.ராஜா மீது மனுஷ்யபுத்திரன் போலீஸில் புகார்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் இரண்டு நாட்களுக்கு முன் ''ஊழியின் நடனம்'' என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். கேரளா வெள்ள பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு வெள்ளம் குறித்தும் மழை குறித்தும் புனைவு கவிதை எழுதி இருந்தார்.
பொதுவாக ஒரு பெண்ணை வைத்து அவர் வர்ணனை கவிதை எழுதி இருந்தார். ஆனால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்த கவிதை இந்து மத கடவுள்களை இகழ்வதாகவும், இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும் கூறி இருந்தார். அதேபோல் இஸ்லாமிய மதவெறி பிடித்து மனுஷ்ய புத்திரன் இப்படி எழுதியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும், மனுஷ்யபுத்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனை இணையம் முழுக்க வைரலானது. எச்.ராஜாவிற்கு ஆதரவாக சிலரும், மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக சிலரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் எச்.ராஜாவின் டிவிட்டர், பேஸ்புக் போஸ்டுகள் காரணமாக, தனக்கு கொலை மிரட்டல் வருகிறது, இதனால் என் உயிருக்கு ஆபத்து நிலவுகிறது, என்று மனுஷ்யபுத்திரன் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கொலை மிரட்டல் , வன்முறைக்கு தூண்டுதல், ஆபாச தீண்டல் உள்ளிட்ட பிரிவுகளில், இந்திய தண்டனை சட்டம் 153, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய வேண்டும், உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.