கரைந்து காணாமல் போகும் தீபா கட்சி...2 நாட்களாக பொறுப்பாளர்கள் நேர்காணலுக்கு ஒருவர் கூட வரவில்லை!
ஜெ.தீபா அணியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணலுக்கு யாரும் ஆர்வம் காட்டாததால் நேர்காணல் காத்து வாங்கியது.
சென்னை : தீபா பேரவையின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணலில் இரண்டாவது நாளாக இன்றும் யாரும் பங்கேற்காததால் அவரது அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் மக்கள் சேவையைத் தொடர தானும் அரசியலில் குதிக்கப் போவதாகக் கூறினார். இதனையடுத்து தனது கட்சிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என பெயரிட்டார்.
தீபா பேரவையில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தீபாவிற்கும், அவரது கணவர் மாதவனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலில் அவர் பிரிந்து சென்று தனிக்கட்சியைத் தொடங்கினார். அவரும் ஜெயலலிதாவின் மக்கள் சேவையைத் தொடரவே கட்சியைத் தொடங்குவதாகக் கூறினார்.
ஆதரவு இல்லை
ஜெயலலிதா மறைந்த போது தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தீபாவை சந்தித்து ஆதரவு அளித்தனர். தி.நகரில் அவரது வீட்டின் முன் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதியபடியே இருக்கும். தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அதிமுக தலைமை இல்லாமல் தவித்த போது தொண்டர்கள் பலர் தெரிவித்தனர். ஆனால் தீபாவின் அரசியல் அணுகுமுறை எதிர்பார்த்த அளவில் இல்லாதது தொண்டர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பாளர்கள் நேர்காணல்
தீபா தனது பேரவைக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் நேர்காணல் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 24ம் தேதி முதல் 27ம் தேதி வியாழக்கிழமை வரை தினமும் மாலை 3 மணி முதல் 8 மணி வரை சென்னை தியாகராயநகர், சிவஞானம் தெருவில் உள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
முதல் நாள் நேர்காணல்
முதல் நாள் நேர்காணல் கன்னியாகுமரி (மேற்கு - பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பகுதி) மாவட்ட நேர்காணல் நடைபெற இருந்தது. இதே போன்று திருவள்ளூர் (மேற்கு), திருவள்ளூர் (மத்தி) ஆகிய பகுதிகளுக்கான பொறுப்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் நாள் நேர்காணலுக்கு ஒருவர் கூட வராமல் போக அதிர்ச்சியடைந்தார் தீபா.
இரண்டாம் நாளிலும் ஆளே இல்லை
இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் நேர்காணலிலும் பங்கேற்க அவரது கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நேற்று போலவே இன்றும் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் ஏமாற்றத்துடனே திரும்பி வந்தனர்.
கரைந்து வரும் கட்சி
தொடக்கத்தில் தீபாவை தொண்டர்கள் பலரும் சந்தித்து அடுத்த ஜெயலலிதா போன்ற பில்ட்அப்புகளையெல்லாம் கொடுத்ததனர். ஆனால் இரண்டு நாட்களாக நிர்வாகிகள் நேர்காணலில் காத்து வாங்கும் அவரது அலுவலகத்தின் நிலையே கட்சி கரைந்து காற்றோடு காற்றாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.