அதிமுக அரசை யாராலும் அசைக்க முடியாது - விழுப்புரத்தில் முழங்கிய ஈபிஎஸ்
மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று விழுப்புரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஆண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சாலை மார்க்கமாக சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கூடுவாஞ்சேரியில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையேற்றுக்கொண்டு உற்சாகமாக பயணத்தை தொடர்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.
மேல்மருவத்தூர் கோவிலில் ஆசி
அங்கே பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார். கருவறைக்கு சென்று 108 மந்திரங்கள் முழங்க குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. அந்த அர்ச்சனை குங்குமம் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பங்காரு அடிகளாரிடம் தனியாக சில நிமிடங்கள் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புற்றுமண்டபம், அதர்வண பத்ரகாளியை வணங்கிவிட்டு விழாவிற்கு சென்றார்.
நலத்திட்டங்கள்
உற்சாகத்தோடு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டத்திற்காக பல திட்டங்களை அறிவித்தார். ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றபடும் என்று கூறினார். கடல்நீரை குடிநீராக்க ரூ.1000 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வீழ்ந்து போவார்கள்
இந்த அரசை வீழ்த்த நினைப்பவர்கள் தானாக வீழ்ந்து போவார்கள் என அவர் எச்சரித்தார். மேலும் ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
அசைக்க முடியாது
மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று பேசிய முதல்வர் தனது அரசை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார். விழாவிற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி கூறிய எடப்பாடி பழனிச்சாமி, நேற்றும் நமதே, இன்றும் நமதே, நாளையும் நமதே என்று கூறினார்.
சி.வி சண்முகம்
முன்னதாக பேசிய அமைச்சர் சி.வி சண்முகம், அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றார். அதிமுக அரசு அனைத்தையும் கடந்து நலத்திட்டங்களை செய்து வருகிறது என்று கூறினார்.
தினகரனுக்கு சவாலா?
டிடிவி தினகரன் கடந்த 4ஆம் தேதியன்று நிர்வாகிகளை அறிவித்தார். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போகிறார். இந்த நிலையில் தினகரனுக்கு சவால் விடும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.