சிரிப்பாய் சிரிக்கும் அதிமுகவின் விளம்பரக் கலாச்சாரத்தோடு எந்த கட்சியாலும் போட்டியிட முடியாது: திமுக
சென்னை: இனி எந்தக் கட்சியும் அ.தி.மு.க. வினரின் விளம்பரக் கலாச்சாரத்தோடு போட்டி போடக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அது மிகவும் கீழே தாழ்ந்து அரசியலில் தலைகுனிவை உண்டாக்கிவிட்டது என்று திமுக தலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திமுகவினருக்கு கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அ.தி.மு.க.வினர் கடைப் பிடித்து வரும் விளம்பர முறைகள், போக்குவரத்து நெருக்கடியையும், பாதசாரிகளுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தி, அரசியல் விளம்பரமே ஆதிக்கச் சக்திகளின் ஆக்கிரமிப்பு தான் -- வெற்றுச் செல்வாக்குக்கான அத்துமீறல் மற்றும் மலிவான
தந்திரம் தான் என்ற வெறுப்பையும், கோபத்தையும் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.
31-12-2015 அன்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுவையொட்டி, ஜெயலலிதா வசிக்கும் போயஸ் தோட்ட மாளிகை முதல் திருவான்மியூரில் நிகழ்ச்சி அரங்கம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளின் இரு மருங்கிலும், நடுவிலும் மூன்று வரிசைகளில் ஜெயலலிதாவுக்காக வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விளம்பர சாதனங்கள், அ.தி.மு.க. அறிமுகப்படுத்தியுள்ள விளம்பரக் கலாச்சாரத்தின் உச்சம்; எந்த அளவுக்கு இந்த விளம்பரங்கள் பொதுமக்களிடம் முகச் சுளிப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தின என்பதை நடுநிலை நாளேடுகள் படம் பிடித்துக் காட்டியிருந்தன.
சாலைகளை மறிக்கும் பேனர்களில் தொடங்கிய அதிமுகவின் விளம்பரக் கலாச்சாரம் "ஜெயலலிதா ஸ்டிக்கர்" வரை சென்று விட்ட கொடுமையைப் பார்த்துக் கண்டிக்காதவர்கள் இல்லை; தரம் தாழ்ந்த இந்த நிலை எண்ணிக் கைகொட்டிச் சிரிக்காதார் இல்லை. இனி எந்தக் கட்சியும் அ.தி.மு.க. வினரின் விளம்பரக் கலாச்சாரத்தோடு போட்டி போடக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அது மிகவும் கீழே தாழ்ந்து அரசியலில் தலைகுனிவை உண்டாக்கிவிட்டது.
அ.தி.மு.க. விலாவது இப்படிப்பட்ட கட்-அவுட்களை, அவர்களுடைய தலைவிக்கு மட்டுமே வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் நம்முடைய கழகத்திலே உள்ள சிலர், தங்கள் தங்கள் கட்-அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதால், அது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பைத் தான் ஒட்டு மொத்தக் கழகத்திற்கும் உண்டாக்கிவிடும். அதனால் தான் ஏற்கனவே ஒரு முறை கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடைய உருவப் படங்களைத் தவிர வேறு யாருடைய உருவப் படங்களையும்; கழக நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும் போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் அண்மைக் காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, நாமும் அது போல விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால் பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் நம்மையும் அ.தி.மு.க. வோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.
"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி விடும்" என்ற பழமொழியை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே அத்தகைய போக்கினை கழகத்தினர் உடனடியாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டு மென்று தலைமைக் கழகத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.