நவ.8, 2015... கடலூரை சூறையாடிய மழை.... மறக்க முடியாத வெள்ள நினைவுகள்!
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் நவம்பர் 8ம் தேதி தொடங்கிய பெருமழை கடலூர் மாவட்டத்தை சூறையாடியது.
கடலூர்: சுனாமியோ, புயலோ, பெருமழையால் ஏற்படும் வெள்ளமோ எதுவென்றாலும் அதிகம் தாக்குவது கடலூராகத்தான் இருக்கிறது. இது இந்த மாவட்டத்திற்கான சாபக்கேடாகத்தான் இருக்கிறது. தானே புயலில் இருந்து தாண்டி வந்தவர்கள் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் கோரத்தாண்டவத்திற்கு பெரும் கொடுமையை அனுபவித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழையால் கடலூர் மாவட்டமே பெரும் வெள்ளக்காடானது. ஒருநாள் பெய்த மழையோடு ஓயவில்லை... விட்டு விட்டு பெய்த பெரு மழையும், அதைத் தொடர்ந்து ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அந்த மாவட்ட மக்களை டிசம்பர் 8ம் தேதி வரை பாதித்தது. ஒரு மாதமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் மட்டும் பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின.
கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியில் அந்த நாளில் 48 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் மாவட்டமே வெள்ளக்காடானது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை வெள்ளத்திற்கு பாதிக்கப்பட்டது. கரும்பு, வாழை, முந்திரி என கடலூரின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது.

துண்டிக்கப்பட்ட போக்குவரத்து
கடலூர் - சிதம்பரம் பிரதான நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் சிதம்பரத்திலிருந்து கடலூர், பாண்டிச்சேரி வழியாக சென்னை வரவேண்டிய பேருந்துகள் கம்மாபுரம், விருத்தாச்சலம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டன. கிராமங்களுக்கு இடையேயான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஒவ்வொரு கிராமமும் தனித்தனி தீவுகளாக மாறின.

ரூ. 400 கோடி நெய்வேலி இழப்பு
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்யக்கூடிய சராசரி மழை அளவு, ஒரே நாளில் கொட்டித்தீர்க்கவே பாதிப்பு பலமடங்காக உயர்ந்தது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படும் மூன்று சுரங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் மட்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதில் ரூ. 500கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.

வெளியேற்றப்பட்ட வெள்ள நீர்
நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து முன்னறிவிப்பு இன்றி வெள்ள நீர் வெளியேற்றப்பட்டதால் மழை வெள்ளத்தோடு இந்த தண்ணீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது. திடீர் வெள்ளத்தால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பலரும் வெள்ளத்தில் மாயமாகினர். மனிதர்களுடன், கால்நடைகளும் மடிந்தன.

லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதம்
கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் 20,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வாழையும், கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டா சம்பா பயிரும் சேதமடைந்தன. 35,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, வாழை, முந்திரி உட்பட பல்வேறு பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரம் துண்டிப்பு
கடலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களிலும் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் மூழ்கிய கடலூர் மாவட்டம் இருளிலும் மூழ்கியது. நகரப் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

முகாம்களில் குடியேறிய மக்கள்
கிராமங்களில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குடிநீரும் உணவும் இல்லாமல் மக்கள் தவித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் மாதக்கணக்கில் முகாம்களில் குடியேறினர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரங்கள் நீண்டன. வடியாத வெள்ளம் என்று எதுவுமில்லை என்றது போல வெள்ளம் வடிந்தது. மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

வெள்ளம் வரட்டும் சமாளிக்கலாம்
இதோ இன்னொரு வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. மீண்டும் வெள்ளம் வருமே என்ற அச்சம் எழுந்தாலும்... நாங்க எல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போட்டவங்க... இந்த ஆண்டு எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் அதை சமாளிப்போம் என்ற துணிச்சலுடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர் கடலூர் மாவட்ட மக்கள்.












Click it and Unblock the Notifications