'முந்திரிக்கொட்டை' ஜெயமோகனால் 'தேவாங்கு' என விமர்சிக்கப்பட்ட வங்கி ஊழியரின் நிஜ நிலைமை இதுதான்!
எழுத்தாளர் ஜெயமோகனால் தேவாங்கு என விமர்சிக்கப்பட்ட மகாராஷ்டிரா வங்கி ஊழியரின் உண்மையான உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: எழுத்தாளர் ஜெயமோகனால் 'தேவாங்கு' என விமர்சிக்கப்பட்ட மெதுவாக பணி செய்த வங்கி பெண் ஊழியர் உண்மையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அப்படியான நிலையிலும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என கடமையாற்றியவர் எனவும் தகவல்கள் வெளியாகின.
சமூக வலைதளங்களில் அண்மையில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அதில் வங்கி பெண் ஊழியர் ஒருவர் மிகவும் மெதுவாக வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக தம்முடைய இணையத்தில் கருத்து தெரிவித்திருந்த ஜெயமோகன் மிக மோசமான வார்த்தைகளால் அப்பெண் ஊழியரை 'தேவாங்கு' என்ற தலைப்பில் விமர்சித்திருந்தார். அதில், "நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும்.
வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல. இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம். எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்! என சாடியிருந்தார்.
ஜெயமோகனின் இந்த கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த கருத்தை தம்முடைய இணையப் பக்கத்தில் இருந்து நீக்கினார் ஜெயமோகன். ஆனாலும் இன்று வரை ஜெயமோகனுக்கு கண்டன கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஜெயமோகனும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
இதனிடையே அந்த வங்கி ஊழியரின் உண்மை நிலை குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவத்சவா தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ளதாவது:
வீடியோவில் மெதுவாக வேலை செய்யும் ஊழியர் பெயர் பிரேம்லதா ஷிண்டே. புனேவில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் பணியாற்றுகிறார். கணவரை இழந்த அவர் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.
அவரது மகன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். பிரேம்லதா ஷிண்டேவுக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. ஒருமுறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். வீடியோவில் இடம்பெற்று காட்சியானது சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய நாட்களில் எடுக்கப்பட்டது.
இத்தனைக்கும் பிரேம்லதா ஷிண்டேவுக்கு மருத்துவ விடுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது வீட்டில் இருந்து கொண்டே அவர் ஊதியத்தைப் பெற முடியும்.
ஆனால் பிரேம்லதா ஷிண்டேவோ ஓய்வு பெறும்போது கண்ணியத்துடனும் நேர்மையுடனும் ஓய்வு பெற நினைத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வேலைக்கு திரும்பியிருக்கிறார்.
தம்முடைய சிகிச்சைக்கான பணத்தை தாமே சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சக்கணக்கான பெண்களில் ஒருவராகத்தான் பிரேம்லதா ஷிண்டே இருக்கிறார். அவரை விமர்சித்து பதிவு போட்டதற்கு பதிலாக அவரது உண்மை நிலையை சொல்லி பாராட்டி வீடியோவை போட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு குந்தன் ஸ்ரீவத்சவா பதிவிட்டிருக்கிறார்.
இந்த உண்மைகள் வெளியானதைத் தொடர்ந்து ஜெயமோகன் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் வங்கிதுறையின் பொறுப்பின்மை மீதான கோபத்தின் வெளிப்பாடுதான் தம்முடைய முந்தைய பதிவு எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.