பிரச்சனைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தருகிறார் ஓபிஎஸ்!
தேனி அருகே தனக்கு சொந்தமான நிலம் மற்றும் கிணறை அன்பளிப்பாக கிராம மக்களுக்கு தர உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி: பிரச்சனைக்குரிய தனது கிணற்றை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தர உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தையும் கிராம மக்களுக்கு தானமாக கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் ஓபிஎஸ்க்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்டுள்ள 200 அடி ஆழ கிணறுகளால் அப்பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிராம மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் ஓபிஎஸின் கிணற்றை முற்றுகையிடச் முயன்ற பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

3 மாதத்துக்கு அனுமதி
இதைத்தொடர்ந்து ஓபிஎஸுடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 மாதத்துக்கு கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொள்ள கிராம மக்களுக்கு ஓபிஎஸ் அனுமதி அளித்ததாக கூறப்பட்டது.

நிலத்தை வாங்க முடிவு
இதைத்தொடர்ந்து கிணறு அமைக்கப்பட்டுள்ள தனக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை ஓபிஎஸ் விற்கவுள்ளதாக தகவல் வெளியானது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை கிணற்றுடன் சேர்த்து வாங்க லட்சுமிபுரம் கிராம மக்கள் முடிவுசெய்தாக கூறப்பட்டது.

அன்பளிப்பாக வழங்கத் தயார்
இதற்காக ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் தலா ரூ20, 000 கொடுத்து நிலத்தை வாங்க போராட்டக்குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தனது கிணறு மற்றும் 40 ஏக்கர் நிலத்தை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸால் கிராம மக்கள் மகிழ்ச்சி
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தானமாக வழங்கவுள்ள இந்த நிலத்தின் மதிப்பு 6 கோடி ரூபாய் ஆகும். ஓபிஎஸின் இந்த அறிவிப்பால் லட்சுமிபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications