தமிழர் குல சாமியே..தன்மானச் சிங்கமே... சட்டசபையில் ஜெ. குறித்து கவிதை பாடிய ஒபிஎஸ்!
சென்னை: தமிழக சட்டசபையில் 2014 -15ம் ஆண்டிற்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாவதத்திற்கு பதிலுரை அளிக்கும் முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போற்றி கவிதை ஒன்றை வாசித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2014 - 15ம் ஆண்டுகளுக்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாதம் நடைபெற்றது.
அதற்கு தனது பதிலுரையை வாசிக்க எழுந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். தனது பதிலுரையை தொடங்கும் முன்னதாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவைப் போற்றி கவிதை ஒன்றி அவர் வாசித்தார்.
அவர் பாடிய கவிதை பின்வருமாறு...
அன்னை தமிழகத்தை, அன்புச் சரணாலயமாய் பூத்துக் குலுங்க வைக்கும், புறநானூற்றின் புதுவடிவே! தாயாகி, தந்தையாகி, தமிழர் குலச் சாமியாகி, யாதுமாகி நிற்கும் எங்கள் தாயுமானவரே!
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடிய நாவுக்கரசரின் திருவாய்மொழிப்படி வாழுகின்ற எடுத்துக்காட்டாய் திகழும் வரலாற்று வடிவே!
முன்னிருந்தோர் முடிக்க இயலாப் பெருஞ்செயல்களை முன்நின்று நிறைவேற்றும் முத்தமிழின் திருவடிவே!
வேதனைகளெல்லாம் தமக்கென்றும், விளைகின்ற நலம் எல்லாம் பிறர்க்கென்றும், தமிழகம் செழிக்க தவ வாழ்வு வாழ்கின்ற தியாகத் திருவுருவே!
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும், நேருக்கு நேர் நின்று போராடும் நெஞ்சுரமும், தனக்கே உரிமைஎனக் கொண்ட தன்மானச் சிங்கமே!
சோழநாட்டுக் கரிகால் பெருவளத்தானும், பாண்டி நாட்டு ராணி மங்கம்மாளும், வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த நீராதார உரிமைகளை, வெள்ளைத் தாளெடுத்துப் போரிட்டு வென்று வந்த வீரத்தாயே!
தமிழகமே தனது இல்லமாய், தமிழ் மக்களே தனது சுற்றமாய் தமிழ்நாட்டின் நலனுக்கென தன் வாழ்வையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னிகரில்லாத் தங்கமே!
மக்கள் முதல்வர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களே!
தங்கள் பொற்பாதங்களில் எனது வணக்க மலர்களைக் காணிக்கை ஆக்கி, தாங்கள் வீற்றிருக்கும் திசை நோக்கி வணங்கி, 2014-2015 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாதத்திற்கு எனது பதிலுரையை வழங்க விழைகிறேன்.
என இவ்வாறு அவர் அக்கவிதையில் தெரிவித்திருந்தார்.