சுயநலமின்றி கட்சி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன்... ஓ.பன்னீர்செல்வம் அளித்த உறுதி!
சென்னை : சுயநலமின்றி கட்சி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்த பின்னர் சென்னை வானகரத்தில் அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு இணையான அதிகாரங்களுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் மக்களுக்கு தெரிய வரும் விஷயம் என்னவென்றால் ஆட்சியில் நம்பர் ஒன் முதல்வர் பழனிசாமி, நம்பர் 2 அதாவது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியைப் பொறுத்த வரை நம்பர் 1 ஓ.பன்னீர்செல்வம், நம்பர் 2 பழனிசாமி. இந்த ரீதியில் தத்தம் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் பொறுப்புகள் பங்கு போடப்பட்டுள்ளன.

ஓபிஎஸ் சபதம்
அதிமுகவில் இருந்து விலகி கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்ததில் இருந்து சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வேறருக்கும் நடவடிக்கை முன் எடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற முழக்கத்தோடு ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஆணையம் என்று கூறியதால் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றார்.

தனி அணி
இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனியாக களம் கண்டு அதிமுக கட்சியின் பெயர், சின்னத்தை பெற உரிமை கொண்டாடினர். இதனால் அதிமுக இரண்டு அணியாக அதிகாரப்பூர்வமாக பிரிந்து தேர்தல் ஆணையம் இரண்டு அணிக்கும் பெயர், சின்னத்தை ஒதுக்கியது. அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் செயல்பட்டு வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

முதல்வரின் அதிரடி மூவ்
அணிகள் இணைப்பு கிடையவே கிடையாது என்று சொன்னவர், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஜெ.வின் போயஸ் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. இந்த அறிவிப்பு வெளிவந்த சில நாட்களிலேயே ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்தது.

இணைந்த இலைகள்
அதிமுகவில் இனி அணிகள் இல்லை என்று அறிவித்ததோடு, கட்சியில் புதிய பதவிகளை உருவாக்கி ஓ.பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரு அணிகள் இணைந்த பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் 2130 பொதுக்குழு உறுப்பினர்கள் அதாவது 98 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர் என்று முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
|
ஓ.பிஎஸ் உறுதி
இதனிடையே கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ள தான் எந்த வித சுயநலத்திற்கும் இடம் கொடுக்காமல் செயல்படுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் 27 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அளித்துள்ளனர். ஜெயலலிதாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் தொண்டர்கள் இறுதி வரை செயல்படுவார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications