இந்தப் "புலி" பதுங்கியபடியே இருக்கும்.. ஆனால் கடைசி வரை பாயவே பாயாது!
சென்னை: புலி பதுங்குவது பாய்வதற்காக என்பார்கள்.. ஆனால் தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வமோ தொடர்ந்த பம்மியபடியே இருக்கிறார். அவ்வளவு பவ்யமாக, ஆர்ப்பாட்டமே இல்லாமல் இருக்கிறார். இந்த பதுங்கல் நிச்சயம் பாய்வதற்கு இல்லை. கடைசி வரை இப்படியே "மெயின்டெய்ன்" பண்ணுவதற்காக என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
எப்போதுமே அமைதியானவர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் அவருக்குத்தான் எத்தனை பொறுப்புகள், எத்தனை சுமைகள். உள்ளூர ஒரு விதமான அச்சம் இருந்தாலும் கூட இந்த சுமையை தன் தலை மீது தூக்கி வைத்தவருக்கு அவ்வளவு விசுவாசமாக நடந்து கொள்வதில் பன்னீர் செல்வம் படு கரெக்டாக செயல்படுகிறாராம்.
எள்ளளவும் தனது நிலையிலிருந்து பிசகாமல், தன் பெயருக்கு கெட்ட பெயர் வந்து விடாமல் பார்த்துக் கொண்டு மிகவும் அலர்ட்டாக நடந்து வருகிறாராம் பன்னீர் செல்வம்.
தஞ்சாவூரில் அரசு பொருட்காட்சி நுழைவாயிலில் முதல்வர் என்ற கையில் பன்னீர்செல்வத்தின் படம் மாட்டப்பட்டது. இந் நிலையில் அதை இப்போது நீக்கிவிட்டனர். பன்னீர் நீக்க சொன்னாரா.. அல்லது மேலிடம் நீக்க சொன்னதா என்று தெரியவில்லை. இந்த நிலைமையில் தான் ஓ.பி.எஸ்சின் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பொதுப்பணித்துறைக்கும் இவர் தான் அமைச்சர் என்ற வகையில் அந்தத் துறையின் 'முக்கிய வேலைகளை' இவரது தம்பி ஓ.ராஜா நன்றாகவே பார்த்துக் கொள்கிறாராம். ஓ.பி.எஸ் ஒரு பக்கம் வெளியில் பணிவு காட்டிக் கொண்டு இருந்தாலும் பொதுப்பணித்துறையில் நடக்க வேண்டிய 'முக்கிய வேலைகள்' நடந்து கொண்டு தான் உள்ளன.
அல்லோகல்லமே இல்லை
வழக்கமாக முதல்வர் ஒரு ஊருக்கு போகிறார் என்றால் மாவட்ட நிர்வாகம் அல்லோகல்லப்படும். ஒரு வாரத்திற்கு முன்பே கலெக்டருக்குத் தகவல் போய் விடும். பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும். ஹெலிபேட் தயாரிப்பு, போலீஸ் குவிப்பு, ரோடு போடுவது என தடபுடல்படுத்தி விடுவார்கள். ஆனால் ஓ. பன்னீர் செல்வம் ஆட்சியில் அப்படி ஒரு பரபரப்பு கூட இல்லை.
மதுரைக்கு வந்தாரா ஓ பன்னீர் செல்வம்
சமீபத்தில்கூட இப்படித்தான் ஓ.பன்னீர் செல்வம் மதுரைக்கு வந்தார். ஆனால் வந்ததே பலருக்குத் தெரியாத அளவுக்கு படு அமைதியாக நடந்து முடிந்துள்ளது அந்த விசிட். ஒரு முதல்வர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் படு கமுக்கமாக வந்து போனார் பன்னீர் செல்வம்.
பொருளாளராக இருப்பதால் வர வேண்டியதாப் போச்சு
ஒரு முதல்வர் எதற்காக மதுரை, அண்ணா நகருக்கு, ஒரு வங்கிக்கு வர வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் வங்கி முறைப்படி ஓ.பன்னீர் செல்வம் வந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டதால்தான் வந்து போனாராம். காரணம், இவர் அதிமுகவின் பொருளாளராகவும் இருப்பதால்.
லாக்கரில் தங்க கிரீடம், கவசம்
பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கிரீடமும், கவசமும் செய்து தருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். அதன்படி அது தயாரிக்கப்பட்டுள்ளது. அதை அண்ணா நகரில் உள்ல பேங்க் ஆப் இந்தியா கிளையின் லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதை லாக்கரில் வைத்தவர் கட்சி பொருளாளரான ஓ.பன்னீர் செல்வம்.
வெளியில் எடுக்க வந்தார் பன்னீர் செல்வம்
நாளை தேவர் குரு பூஜை என்பதால் சில நாட்களுக்கு முன்பு இந்த கிரீடத்தையும், கவசத்தையும் எடுத்து தேவர் நினைவிட நிர்வாகிகளிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூறி விட்டனர். இதற்காகத்தான் மதுரைக்கு வந்தார் பன்னீர் செல்வம்.
விதிகளை மாற்ற மறுப்பு
முன்னதாக நேரில் வராமல் இருக்க என்னென்னமோ செய்து பார்த்துள்ளது முதல்வர் அலுவலகம். ஆனால் எந்த விதி முறையையும் மாற்றுவது இயலாது என்று வங்கி நிர்வாகம் தெளிவாக கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் பன்னீர் செல்வம் கிளம்பி வந்தார்.
படு உஷார்
வங்கிக்கு வந்தவர் கையெழுத்துப் போட்டு கிரீடத்தையும் கவசத்தையும் பெற்று உரியவர்களிடம் கொடுத்த பின்னர் புறப்பட்டுச் சென்றனர். இருந்த சில நிமிட நேரத்திலும் அவர் படு இறுக்கமாக இருந்துள்ளார். தன்னிடம் பேசியவர்களிடமும் அளந்தே பேசியுள்ளார். அங்கு கூடிய பத்திரிகையாளர்ளைப் பார்த்து டென்ஷனாகியுள்ளார்.
வெறும் 20 போலீஸார்
வழக்கமாக ஜெயலலிதா ஒரு இடத்திற்கு முதல்வர் பதவியில் இருந்தபோது வருவதாக இருந்தால் குறைந்தது நூற்றுக்கணக்கான போலீஸார் குவிந்திருப்பார்கள். ஆனால் பன்னீர் செல்வத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வெறும் 20 போலீஸாரே கூடியிருந்தனர்.
தனி காரில்
மேலும் தனக்கு முன்பும், பின்பும் யாரும் வரக் கூடாது என்றும் பன்னீர் செல்வம் கூறி விட்டதால் கட்சிக்காரர்களின் கார்களும் உடன் வரவில்லை. இதனால் படு அமைதியாக, மக்களோடு மக்களாக பன்னீர் செல்வத்தின் கார் பயணித்தது.
அப்படீன்னா இவரைத்தானே மக்களின் முதல்வர் என்று கூற வேண்டும்....??