ஓயாத ஓகி... நெல்லை மாவட்டத்தில் தொடரும் கனமழை
ஓகி புயல் கரையைக் கடந்த பிறகும், விடாத மழை தொடர்வதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஓகி புயல் கடந்த பின்பும் மழை தொடர்வதால் பொது மக்கள் கஷ்டத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஓகி புயலாக மாறியதால் நெல்லை, தூத்துக்குடி உள்பட 3 மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இந்தப் புயலால் குமரி மாவட்டத்தில் பல மரங்களும், மின் கம்பங்களும் பலத்த சேதம் அடைந்தன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் குறுக்குதுறை சுப்பிரமணியசாமி கோவில், தைப்பூச மண்டபம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து சாமி சிலைகள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் தாசில்தார் அறிவுறுத்தலிழன் பேரில் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பலத்த மழை காரணமாக செங்கோட்டை அரசு பஸ் ஹரிகர ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அதில் இருந்த 40 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆலந்தலை-தளவாய்புரம் புதிய பாலம் தாக்குபிடிக்காமல் இடிந்து விழுந்தது.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் 103, ஆய்க்குடி 120, சேரன்மகாதேவி 65, நாங்குநேரி 66, பாளை 50, ராதாபுரம் 94, செங்கோட்டை 121, சிவகிரி 91, தென்காசி 168, நெல்லையில் 46 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.