பழைய ரூபாயை சம்பளமாக தலையில் கட்டும் பீடி நிறுவனங்கள்: தொழிலாளர்கள் அவதி
நெல்லை: நெல்லை பகுதியில் பழைய ரூபாய் நோட்டுகளை பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு கொடுப்பதால் அவர்கள் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பல தனியார் பீடி கம்பெனிகள் உள்ளன. இங்கு வழக்கமாக பீடி சுற்றுவதற்கான மூல பொருட்களை வாங்கி பீடி சுற்றிக் கொடுக்கின்றனர். இதையடுத்து தொழிலாளர்களுக்கு பாஸ் புக்கில் நிறுவனங்கள் எவ்வளவு தொகை என வரவு வைக்கின்றன.

மாதம் ஒரு தடவை கணக்கு பார்த்து பீடி சுற்றிய பெண்களுக்கு கழிவு போக பணம் கொடுக்கப்படுகிறது. கடந்த மாதம் 8ம் தேதி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பீடி சுற்றியவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் போதிய பணம் இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஊதியம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டதால் தொழிலாளர்களும், பெண்களும் அங்கு குவிந்தனர்.
அவர்களுக்கு ஊதியமாக பீடிக் கடையில் பணிபுரிபவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வழங்கினர். இதனால் ஊதியம் வாங்க வந்த பெண் தொழிலாளர்கள் வேதனை அடைந்தனர். இது குறித்து கம்பெனியில் உள்ளவர்களிடம் கேட்டபோது, தங்களுக்கு மேல் பொறுப்புகளில் இருப்பவர்களிடம் இருந்து இந்த நோட்டுகள் தான் வந்தது. அதை தான் நாங்கள் வழங்க முடியும். அதனை கொடுத்து வருகிறோம் என்று தெரிவித்தனர். மேலும் தொழிலாளர்களோ இந்த நோட்டுகளை மாற்ற ஒரு நாள் முழுக்க வங்கியில் காத்திருக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications