எந்த அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எண் பயன்படுத்தினீர்கள்? மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி
எதன் அடிப்படையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் தேவநகரி எழுத்தை பயன்படுத்தினீர்கள் என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: எந்த அடிப்படையில் தேவநகரி எண் வடிவத்தை 2000 ரூபாய் நோட்டில் பயன்படுத்தினீர்கள் என மத்திய அரசுக்கு, மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த அக்ரிகணேசன், ஹைகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் "இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த 500, 1000 ருபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டுள்ளது.
இந்த 2000 ரூபாய் நோட்டில் சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவங்களுக்கு பதில், தேவநாகரி வடிவத்தில் எண்களை குறிப்பிட்டு உள்ளனர். ஹிந்தி மொழியில், எண்களுக்கு தேவநாகரி எழுத்துக்களை பயன்படுத்துகின்றனர். மத்திய ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும், எண்களை பொறுத்தவரை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம்.
தேவநாகரி எண்களை பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதுபோன்ற எந்த சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அரசியலமைப்பு சட்டம், இந்திய ஆட்சி மொழிகள் அனுமதிக்காத ஒன்றான தேவநாகரி எழுத்துக்களை 2000 ரூபாய் நோட்டில் எண்களுக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இது தவிர ரிசர்வ் வங்கி வாரியத்தில் 5000, 10000 ரூபாய் நோட்டுகளை புதிதாக வெளியிட அனுமதி பெறப்பட்டபோது 2000 ரூபாய் வெளியிட அனுமதி பெற வில்லை. 5000, 10000 ரூபாய் நோட்டுகள் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி வாரியத்தில் அனுமதி பெறாத நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது சட்டவிரோதம். எனவே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்" இவ்வாறு இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை ஹைகோர்ட் மதுரை கிளையில் இன்று வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் தேவநாகரி எண்களை ரூபாய் நோட்டில் பயன்படுத்தினீர்கள் என மத்திய அரசுக்கு ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. மேலும், அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்கக்கோரி வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.