கம்பம் அருகே டீ கடைக்குள் கேரள பேருந்து புகுந்து விபத்து: ஒருவர் பலி - 18 பேர் படுகாயம்
கம்பம் டீ கடைக்குள் கேரளா அரசு பேருந்து புகுந்த விபத்தில் பெண் பலியானார். 18 பேர் காயமடைந்தனர்.
தேனி: கம்பம் பழைய பேருந்து நிலையம் அருகே கேரள பேருந்து டீ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்து பழைய பேருந்து நிலைய சிக்னல் அருகே வந்த போது டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து நிலை தடுமாறி சிக்னல் அருகே இருந்த திருப்பதி டீ கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் கேஎம் பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் ,50 மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கவலைக்கிடமாக உள்ள 8 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.விபத்து தொடர்பாக கம்பம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.