இரவு நேர பீச் பைக் ரேஸ்... விபத்தில் சிக்கிய இளைஞர் பரிதாப பலி
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு நடந்த பைக் ரேஸில் இளைஞர் ஒருவர் பேருந்தில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய பைக் ரேஸில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா பீச் ரோட்டில் நேற்று இரவு ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். அதனால் பீச் ரோட்டில் பதற்றம் ஏற்பட்டது. சாலையில் சென்ற இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பைக் ரேஸ் இளைஞர்களைக் கண்டு அலறினர்.
இந்த பைக் ரேஸில், ராயபுரம் மஸ்தான் கோவில் பகுதியை சேர்ந்த நிஜாம், இர்பான் மற்றும் அக்பர் ஆகியோர் ஒரே வண்டியில் சென்று பந்தயத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பரிதாப பலி
ரேஸில் சீறிப்பாய்ந்து சென்ற அவர்களின் வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நிஜாம் அலி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடற்கரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு
மெரினா கடற்கரையில் உள்ள ராஜாஜி சாலையின் எல்லை முடிவுகளில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கண்காணித்தாலும் இரவில் பைக் ரேஸ் நடப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனால் அவ்வப்பொழுது விபத்துக்களும் நடக்கின்றன.

பொதுமக்கள் அச்சம்
இரவு நேரத்தில் மெரினா முதல் அடையாறு வழியாக பெசண்ட் நகர் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பைக் ரேஸ் இளைஞர்களால் பெரும் அவதிப்படுகிறார்கள். எப்போது சாலையில் சீறிப்பாய்வார்கள், யார் மீது மோதுவர்கள் என்பது தெரியாத நிலையில் சென்னையின் நிலைமை உள்ளது என்பதால் சாலையில் பயணிக்க பொதுமக்கள் அஞ்சுகிறார்கள்.

எதிர்ப்பார்ப்பு
இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், பைக் ரேஸ் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய பைக் ரேஸ்களால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என்பது சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications