தொடரும் வேட்டை: கேரளாவைச் சேர்ந்தவர் நெல்லையில் கைது- ஐ.எஸ். ஆதரவாளரா என விசாரணை
நெல்லை: நெல்லை கடையநல்லூரில் கேரளாவைச் சேர்ந்த சுபஹானி என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) இன்று கைது செய்துள்ளனர். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளரா சுபஹானி என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியர்கள் 21 பேர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் 6 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களில் 2 பேர் தமிழகத்தின் கோவை, சென்னையில் பதுங்கியிருந்தவர்கள் என தெரியவந்தது.
இந்த 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தென்னிந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது அம்பலமானது. மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை கடையநல்லூரில் பதுங்கியிருந்த சுபஹனி என்பவரை இன்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சுபஹானியும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரா? என என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் தமிழகத்தில் பதுங்கியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.