நெல்லையில் மேலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல்
நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
நெல்லை: நெல்லையில் ஏற்கனவே இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் ஆயிரம் பேருக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் வராமல் இருந்த நிலையில் நெல்லையில் இந்த காய்ச்சல் தலை தூக்கியுள்ளது. பாளையை சேர்ந்த லலிதா என்பவர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சத்தியபாமாவுக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலின் தீவிரம் குறையாததால் அவர் பாளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டது.
அதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாளை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நெல்லை டவுனை சேர்ந்த அந்தோணிசாமி என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் பாளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் ஐகிரவுண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.