திருத்தணி முருகனை தரிசிக்க மேலும் ஒரு மலைப்பாதை... சட்டசபையில் அமைச்சர் தகவல்
சென்னை: திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல மேலும் ஒரு புதிய மலைப்பாதை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரம் தொடங்கிய உடன் உறுப்பினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர்கள் சிலர் பதிலளித்தனர்.
சரத்குமார் கேள்வி
தென்காசி எம்எல்ஏ சரத்குமார், திருநெல்வேலி மின் பகிர்மான மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தென்காசியில் புதிய மின் பகிர்மான வட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
மடத்துக்குளம் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஊரகத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பட்டுக்கோட்டை புறவழிச்சாலை இரண்டாம் கட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. போரூர் - மதுரவாயில் மேம்பாலப் பணிகள் விரைவில் துவங்கி நிறைவடையும் என்று தெரிவித்தார்.
எஸ்.பி.வேலுமணி
மதுரையில் மேம்பாலம் அமைக்கப்படுமா, சாலைகள் சீரமைக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மதுரையில் சாலைகளை பராமரிக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 300 கோடி ரூபாய் அதிகம் என்று தெரிவித்தார்.
திருத்தணியில் மலைப்பாதை
திருத்தணி முருகனை தரிசிக்க மேலும் ஒரு மலைப்பாதை அமைக்கப்படுமா என்று தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ அருண் சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், திருத்தணி மலைப் பாதையில் முருகன் கோயிலுக்குச் செல்ல மேலும் ஒரு மலைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.