தீபாவளி சிறப்பு பஸ் ஆன்லைன் புக்கிங்... போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.8 கோடியே 35 லட்சம் வசூல்
சென்னை: தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் மூலம் இந்தாண்டு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.8 கோடியே 35 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் 9088 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் கடந்த 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை சென்னையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 4753 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் எஞ்சிய இடங்களில் இருந்து 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 4,335 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பஸ்கள் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை இயக்கப்பட்டது.

ஆன்லைன் பதிவு...
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை 2011-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோட்டையில் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பயணிகள் தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

2011ம் ஆண்டு வருமானம்....
2011-ம் ஆண்டு தீபாவளி சிறப்பு பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 285 பேர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இதன் மூலம் டிக்கெட் வருமானம் ரூ. 3 கோடியே 39 லட்சம் கிடைத்தது.

2012ம் ஆண்டு....
2012-ம் ஆண்டு ஆன் லைன் புக்கிங் மூலம் தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 299 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதன் மூலம் டிக்கெட் வசூல் ரூ.6 கோடியே 3 லட்சம் அரசுக்கு கிடைத்தது.

2013ம் ஆண்டு...
கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 719 பேர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்திருந்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 7 கோடியே 1 லட்சம் வருமானம் கிடைத்தது.

இந்தாண்டு...
இதன்படி, இந்தாண்டு தீபாவளி சிறப்பு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் மட்டும் 2 லட்சத்து 61 ஆயிரத்து 994 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் டிக்கெட் வசூல் ரூ.8 கோடியே 35 லட்சத்து 98 ஆயிரம் அரசுக்கு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications