அதிமுக தேர்தல் அறிக்கை எப்ப வரும்... பேனாவுடன் "ரிவைஸ்" செய்யக் காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா ஏதேனும் அதிரடி கவர்ச்சி திட்டங்களை அறிவித்தால், தங்கள் தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்களை கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர், பாமக, தேமுதிக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.
பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நேரடியான இலவச திட்டங்கள் இடம்பெறவில்லை. எனவே அதிமுக அந்த ஆயுதத்தை கையில் எடுத்து இலவச அறிவிப்புகளை அள்ளி வீசும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை குழு
அதிமுக சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்தல் அறிக்கையை தயாரித்து ஜெயலலிதாவிடம் வழங்கி விட்டார்கள்.
இறுதி வடிவம்
தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். தேர்தல் அறிக்கைக்கு ஜெயலலிதா இறுதி வடிவம் கொடுத்ததும், எந்த நேரத்திலும் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என தெரிகிறது.
விரைவில் வெளியாகும்
அதிமுக வேட்பாளர்கள் வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு முன்னதாக கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா ஏற்கனவே உள்ள திட்டங்களை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
திருத்தம்
தேர்தல் அறிக்கையில் அதிரடி தி்ட்டங்களை அறிவித்துவிட்டு, அதன்பிறகு, அதை முன் வைத்து வாக்கு வேட்டையாட அவர் திட்டமிட்டுள்ளாராம். இதையறிந்துள்ள திமுக, தனது தேர்தல் அறிக்கையை தேவைப்பட்டால் மாற்றி வெளியிடவும் ஆயத்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கையில் பேனாவுடன் காத்திருக்கிறார்களாம்.