ஓபிஎஸ்சின் குடியரசுதினம்... ஈபிஎஸ்சின் சுதந்திர தினம் - ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?
குடியரசு தினத்தன்று முதன் முறையாக காந்தி சிலை முன்பு கொடியேற்றினார் ஓபிஎஸ். அதேபோல சுதந்திர தினத்தன்று முதன் முறையாக கொடியேற்றியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: நாட்டின் 71வது சுதந்திரதினத்தில் முதன் முறையாக முதல்வராக கொடியேற்றியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
நாட்டின் 67வது குடியரசு தினத்தில் மெரீனா கடற்கரைச் சாலையில் காந்தி சிலை முன்பு கொடியேற்றினார் ஓபிஎஸ் . நிரந்தர ஆளுநர் இல்லாத காரணத்தால் அப்போதய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றினார்.

சசிகலா குடும்பத்து சொந்தங்கள், உறவினர்கள் யாருக்குமே விஐபி கேலரியில் இடம் தரவில்லை. அப்போதே ஆரம்பித்து விட்டது அதிகார போட்டி. அடுத்த சில வாரங்களிலேயே முதல்வர் பதவியை இழந்தார் ஓ.பன்னீர் செல்வம்.
பிப்ரவரி 5ஆம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு போகவே, பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி கூவத்தூரில் இருந்து வந்து முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.
கட்சியை கட்டுப்பாட்டில் வைக்க டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா. ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தினகரன் என்று அறிவித்தாரோ அன்றைக்கு இருந்தே முதல்வர், அமைச்சர்களுக்கும், தினகரனுக்கும் இடையே முட்டல், மோதல் ஆரம்பித்து விட்டது.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றுவாரா? அதுவரைக்கும் ஆட்சி நீடிக்குமா என்றெல்லாம் பேசி வந்த நிலையில், இதோ கோட்டை கொத்தளத்தில் முதல்வராக முதன்முறையாக கொடியேற்றி விட்டார் எடப்பாடியார்.
ஆட்சியை கவிழ்க்க மாட்டோம், அதே நேரத்தில் கட்சி அதிகாரத்தை கைவிட மாட்டோம் என்று மேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமைச்சர்கள் தலைகனத்தை குறைக்க வேண்டும் என்றும் மேலூர் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
சுதந்திரதின கொடியேற்றிய பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு அளப்பறிய முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறோம் என்றும் பேசியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கும்,டிடிவி தினகரன் அணிக்கும் இடையே அதிகாரப் போட்டி நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது.
தடைகளை தாண்டி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி, தனது முதல்வர் பதவியை காப்பாற்ற என்ன செய்யப் போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications