கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும்.. ஓபிஎஸ் விருப்பம்!
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கடந்த 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடைசி நாளான இன்று எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் நிறைவேற்றம்
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
ஓபிஎஸ் விருப்பம்
இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் மற்றும் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவர் கருணாநிதி நன்கு உடல்நலம் தேறி, வரும் கூட்டத்தொடரில் பங்கேற்க பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் விரைவில் குணமடைந்து பேரவை நிகழ்வில் பங்கேற்க ஆசைப்படுகிறேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.
தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் எனக்கூறி அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் உரையை நிறைவு செய்தார். இதையடுத்து சட்டசபை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல் வட்டாரத்தில் வியப்பு
அரசியலில் அதிமுகவின் பிரதான எதிரிக்கட்சி திமுக. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.