நெல்லையில் கடும்போட்டிதான்… 99 ஆயிரம் பேர் பங்கேற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு
நெல்லையில் 99 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளனர்.
திருநெல்வேலி: டிஎன்பிஎஸ்சி தேர்வை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 99 ஆயிரம் பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை வருடந்தோறும் அறிவித்து நடத்தி வருகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவர், வரிதண்டலர் உள்ளிட்ட பணியிடஙகள் அடங்கியுள்ளன. இந்த வருடத்திற்கான 5,451 காலி பணி இடங்களுக்கான தேர்வு தேதி கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கும் பணியும் நடந்தது. இது செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த 27ம் தேதி முதல் வெளியிடப்பட்டது. அன்றே பலரும் டவுன்லோடு செய்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் நெல்லை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, வள்ளியூர், விகேபுதூர், சேரன்மகாதேவி, கடையநல்லூர், மானூர், திருவேங்கடம் ஆகிய 16 தாலுக்காக்களில் உள்ள 253 மையங்களில் தேர்வு நடந்தது. இவர்களில் 61 ஆயிரத்து 81 பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி ஓட்டபிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 வட்டங்களில் உள்ள 144 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. இதில் 34 ஆயிரத்து 321 பேர் தேர்வை எழுதினர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு முடிந்தது. தேர்வை ஒட்டி பலத்த பாதுகாப்பு அனைத்து மையங்களிலும் போடப்பட்டிருந்தது. தேர்வு எளிதாக இருந்ததாக அனைவரும் தெரிவித்தனர். ஆனால் நேரம் போதவில்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர்.