காங். ஆதரவு- கருணாநிதி முன்பே சொல்லியிருந்தால் அரசியல் களம் மாறியிருக்கும்: ப.சிதம்பரம்
சிவகங்கை: மதச்சார்பற்ற அரசு அமைக்க காங்கிரஸ் கட்சி முன்வந்தால் ஆதரவு தருகிறோம் என்று 30 நாள்களுக்கு முன்பே கருணாநிதி கூறியிருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் களமே வேறு மாதிரி அமைந்திருக்கும்" என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
சிவகங்கை லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அறிமுகக் கூட்டம் திருப்புவனம் மற்றும் சுற்றியுள்ள காஞ்சரங்குளம், முக்குடி, பாட்டம், கொந்தகை, கீழடி, கழுகேர்கடை ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |||
இக்கூட்டங்களில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
மத்தியிலே அதிமுக அங்கம் வகிக்கும் அரசு என்கிறார் ஜெயலலிதா. எந்தக் கூட்டணியிலும் திமுக, அதிமுக இல்லாதபோது மத்தியில் எப்படி ஆட்சி அமைக்க முடியும். எந்த அரசையும் அவர்களால் தீர்மானிக்க முடியாது.
காங்கிரஸோடு திமுக கூட்டணியிலே இருந்தபோது, ‘வேட்டி கட்டிய தமிழர்கள்தான் பிரதமரை தீர்மானிப்பார்கள்' என்று நான்தான் முதன்முதலில் சொன்னேன். தற்போது திமுக கூட்டணியில் இல்லாதபோது அதை தீர்மானிக்க முடியாது.
கருணாநிதியின் பேச்சு
இதை உணர்ந்துதான், காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற அரசை அமைக்க முன்வந்தால் ஆதரவு தருகிறோம் என்று கருணாநிதி சொல்கிறார். இதை 30 நாட்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் களமே வேறாக அமைந்திருக்கும்.
இளைஞர்கள் அரசு
டெல்லியிலே அரசு அமைக்கக் கூடிய கட்சி காங்கிரஸ்தான். ஏழை, நடுத்தர மக்களை காங்கிரஸ் கட்சி விலகி இருக்காது. புதிய சகாப்தத்தை, புதிய யுகத்தை தொடங்குவோம். புத்துயிரை இந்த நாட்டுக்கு ஊட்டி இளைஞர்கள் அரசை இந்தியாவில் அமைப்போம் என்றார்.
தலையில் கொட்டுங்கள்
காங்கிரஸ் இருக்கும், குறையில்லாத மனிதன் இல்லை, எங்களிடம் நிறை குறை இருக்கத்தான் செய்கிறது. குறைகள் இருந்தால் தலையில் கொட்டுங்கள் என்றார். பாஜக மதவெறி கட்சி, குஜராத் கலவரத்திற்கு இதுவரைமோடி வருத்தம் தெரிவிக்கவில்லை.
நிலையான ஆட்சி
மத்தியில் காங்கிரஸ் கட்சியை தவிர யாரும் நிலையான ஆட்சியமைக்க முடியாது, நாங்கள் ஆட்சியில் இருந்தாலம் சரி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் , தோற்றாலும் சரி சிறுபான்மையினர்,தாழ்த்தப்பட்டோர்,பெண்கள் ஆகியோர் பக்கம்தான் இருப்போம் என்றார்.
மசூதி வாசலில் பிரச்சாரம்
பின்னர் சிதம்பரம் கழுகேர்கடை என்ற இடத்தில் முஸ்லிம் மசூதி வாசலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சிதம்பரத்துடன் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், பாண்டியன் கிராம வங்கி இயக்குநர் டாக்டர் செல்வராஜ்,பேரூராட்சி துணைதலைவர் நடராஜன், கொந்தகை ஊராட்சி தலைவர் கருப்புச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்