தமிழர் வரலாற்றை திசை திருப்ப கருணாநிதி முயற்சி: பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
சென்னை: தை ஒன்றாம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்து தமிழர்களின் வரலாற்றையே திசை திருப்ப கருணாநிதி முயற்சி செய்ததாக, நிதியமைச்சர் பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின் போது 2008 ஆம் ஆண்டு தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து அதற்கான தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பதை மாற்றிவிட்டு, சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று புரட்டிப் போட்டு மாற்றுகின்ற வகையில் மசோதா ஒன்றினை சட்டப்பேரவையிலே கொண்டு வந்து நிறைவேற்றியது.

இந்த நிலையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பன்னீர் செல்வம், விருதாளர்களுக்கு விருதுகள், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய பன்னீர் செல்வம், தமிழ்மொழியை வளர்க்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், தை ஒன்றாம் தேதியை தமிழ் புத்தாண்டு என்று அறிவித்து தமிழர்களின் வரலாற்றையே திசை திருப்ப கருணாநிதி முயற்சி செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications