சென்னை விமான நிலையத்தில் இன்றுமுதல் போக்குவரத்து தொடக்கம்
சென்னை: கனமழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 5 நாட்களுக்குப் பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து இன்று முதல் தொடங்கியுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் வரும் 8ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்நாட்டு போக்குவரத்து முனையம் சீரானதையடுத்து இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.
விமான நிலையத்தில் வெள்ளம்
சென்னையில் நவம்பர் 30ம்தேதி முதல் பெய்த பலத்த மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டது ஆகியவற்றின் காரணமாக மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையில் வெள்ளம் புகுந்தது. இதனால் கடந்த 1ம்தேதி இரவு முதல் பயணிகள் விமான சேவை அனைத்தும் நிறுத்தப்பட்டது. 6ம்தேதி வரை விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மீண்டும் வெள்ளம்
சனிக்கிழமை காலை வரை விமான நிலையத்துக்கு புகுந்த மழை வெள்ளத்தை அகற்ற முடியாத நிலை இருந்தது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி பயணிகள் விமான சேவை இன்று தொடங்கப்படுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. இதனால் மேலும் 2 நாட்கள் கழித்தே விமான போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று முதல் செயல்படும்
இந்த நிலையில் விமான நிலைய முனையத்தில் மின்வினியோகம் சீரடைந்ததும், வெள்ளநீரை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்தது. ஓடுபாதையில் இருந்து வெள்ளம் வெளியேற்றப்பட்டது. இதேபோல் விமானங்கள் நிறுத்தும் பகுதிகளும் ஓரளவு சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் வழக்கம்போல் சென்னை விமான நிலையம் இயங்கும் என்று சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நேற்று இரவு அறிவித்தது.
விமான போக்குவரத்து தொடக்கம்
காலை முதல் உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கும். பகலில் மட்டுமே விமான சேவை இருக்கும். இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவது குறித்து பின்னர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கடந்த 5 நாட்களாக மூடப்பட்டு இருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.
18 விமானங்கள் புறப்பட்டன
சனிக்கிழமையன்று காலை, செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வெளியேற்ற அளவு குறைக்கப்பட்டதால் ஓடுபாதையில் தேங்கியிருந்த நீர் ஓரளவு வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.இதையடுத்து, விமான நிலையத்தில் நின்றிருந்த 18 விமானங்கள் பயணிகள் இன்றி டெல்லி, மும்பை, போர்ட்பிளேர், சிங்கப்பூர், திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி உள்பட பல நகரங்களுக்கு புறப்பட்டு சென்றன.
அந்தமான் விமானம்
இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டது. டெல்லியில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னை புறப்படும். அந்தமானில் இருந்து மதியம் 2 மணிக்கு சென்னைக்கு விமானம் புறப்படும்.
சென்னையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு டெல்லிக்கும், 3.15 மணிக்கு ஹைதராபாத்திற்கும் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வெறிச்சோடிய விமான நிலையம்
தினமும், சென்னை விமான நிலையத்தில் இருந்து சராசரியாக 320 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தரை இறங்கவும், புறப்பட்டும் செல்கின்றன. கடந்த 5 நாட்களாக பயணிகள் யாருமின்றி வெறிச்சோடிக்கிடந்த விமான நிலையம் மீண்டும் சுறுசுறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 நாட்களிலும் எந்த கண்ணாடியும் விமானநிலையில் உடைந்து நொறுங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.