ஏடிஎம் ஏடிஎம்மாக ஏறி இறங்கும் அரசு, தனியார் ஊழியர்கள்.. சம்பளத்தை எடுக்க முடியாமல் பரிதவிப்பு
பல ஏடிஎம்கள் செயல்படாமல் உள்ளதால் சம்பள பணத்தை எடுக்க அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். செயல்படும் ஏடிஎம்களின் முன் அரசு ஊழியர்கள் காத்திருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் கடந்த 24 நாட்களாக வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மக்களின் அன்றாட செலவுக்கு கூட போதிய அளவு பணம் இல்லாமலும், மருத்துவம் மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கு பணம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை ஏழை , நடுத்தர மக்களும், அரசு ஊழியர்களும் பணப்பிரச்சினையில் சிக்கி உள்ளனர். நேற்று சம்பள தினம் என்பதால் பலரும் மழையைப் பொருட்படுத்தாமல் குடையுடன் ஏடிஎம் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்து பணம் எடுத்தனர்.
பல ஏடிஎம்கள் செயல்படவில்லை, வங்கிகளிலும் பணமில்லை என்பதால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் கையில் காசில்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தலைமை செயலகத்தில் கியூ
வங்கிகளில் பணம் எடுக்கப் போனால் 5000 ஆயிரம் மட்டுமே கொடுக்கின்றனர் என்பது அரசு ஊழியர்களின் புகாராகும். இந்த பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது பலரது கேள்வி. நேற்று பணம் எடுக்காதவர்கள் இன்றாவது எடுக்கலாம் என்று ஏடிஎம் மையங்களுக்கு படையெடுத்துள்ளனது. சென்னை தலைமை செயலகத்தில் ஏடிஎம் வாசலில் பணம் எடுக்க அரசு ஊழியர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

24 நாட்களாக தவிப்பு
ஒரு சில ஏடிஎம்களில் பணம் இல்லாததால் காலை முதலே அரசு ஊழியர்கள் தவிப்புக்கு ஆளாகினர். இதனால் அலுவக பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டு 24 நாட்களாகியும் இன்றும் பிரச்சினை தீரவில்லை என்பது மக்களின் புகார்.

அரசு ஊழியர்கள் கலக்கம்
குமரி மாவட்டத்தில் இன்னும் பெரும்பாலான வங்கிகளுக்கு 500 ரூபாய் புதிய நோட்டுகள் வந்து சேரவில்லை. இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
தான் கொடுத்து வருகிறார்கள். ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் நேற்று காலையில் இருந்து 500 ரூபாய் புதிய நோட்டுகள் கிடைத்தன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நேற்று சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த பணத்தை அவர்கள் நேரடியாக வங்கியில் சென்று தான் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் முழு தொகையும் எடுக்க முடியாத நிலை உள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ரூ. 4000 மட்டுமே
காலையிலேயே வங்கிகளில் அதிகளவு கூட்டம் இருந்தது. பென்சன்தாரர்கள், மாதாந்திர உதவி தொகை பெறுகிறவர்கள் என ஏராளமானவர்கள் வங்கிகளில் காலையிலேயே குவிந்தனர். ஆனால் வங்கிகளில் போதிய அளவு பணம் இல்லை என்பதால் அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.4 ஆயிரம் வரை தான் கொடுத்தனர். இதனால் அதிக தொகை எடுக்க வேண்டியவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

வங்கிகள் மனு
இனி வரும் நாட்களில் கண்டிப்பாக வங்கிகளில் கூட்டம் அலைமோதும். பண தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், வங்கிகள் எப்படி சமாளிக்க போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஏராளமானோர் வங்கிகளின் முன் குவிவதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு பல வங்கிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications