தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன் கோரிக்கை
தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியின் முதல்கட்டமாக பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சை முள்ளிவாய்கால் முற்றத்தில் உள்ள முத்தமிழ் மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புகளின் புதிய கட்சியாக தமிழர் தேசிய முன்னனி அமைப்பு என்ற புதிய அரசியல் கட்சி நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று அந்த அமைப்பின் கொடியை அறிமுகப்படுத்தினார் அந்த அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பழ.நெடுமாறன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் தேசிய உணர்வாளர்கள்...
தமிழர் தேசிய முன்னணியில் 60-க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், 400க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய உணர்வாளர்களும் இணைந்துள்ளனர். இந்தியா விடுதலை பெற்று 66 ஆண்டுகள் கடந்த பிறகும் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சனை, மீனவர் பிரச்சனை, கச்சத்ததீவு பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை போன்ற முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர் அதனை சரி செய்ய வேண்டும்.
நமது கடமை...
தமிழர்களுக்கே உரிமையானதும் தொடர்ந்து பன்னெடுங்காலமாக தமிழகத்திற்கே சொந்தமாக விளங்கிவந்த பகுதிகள் மொழிவழி மாநிலப் பிரிவினையின் போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. இழந்த நமது பகுதிகளை மீட்டு, மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதும், இருப்பதை காப்பதும் நமது கடமையாகும்.
எங்கள் கொள்கை...
முழுமையான இறையாண்மையும், தன்னுரிமையும் கொண்ட சமதர்ம தமிழகத்தை உருவாக்கப்பாடுபடுவதே எங்களின் கொள்கையாகும். சாதி,மத வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழர்கள் யாவராயினும் அவர்கள் அனைவரும் ஓர் இனம் என்பதே நமது சமுதாயக் கொள்கையாகும். சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசு பணிகளிலும் மற்றும் சலுகைகளிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
முன்னுரிமை...
தமிழகத்தில் இல்லாத சாதிகளின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி, தமிழ்நாட்டில் வாழும், தொல் தமிழர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடும் சலுகைகளும் அளிக்க வேண்டும். இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளை அரசுத்துறையில் அளிக்கப்படுவதோடு, தனியார் துறையிலும் அளிக்க வற்புறுத்துதல், தமிழ் நாட்டில் இந்தித் திணிக்கப்படுவதையும், ஆங்கில ஆதிக்கம் நீடிப்பதையும் எதிர்த்தல், தமிழக மக்கள் அனைவருக்கும் தொடக்கப்பள்ளியிலிருந்து பல்கலைகழகம் வரை தமிழ்பயிற்சி மொழி அடிப்படையில் இலவச கட்டாயக்கல்வி புகட்டச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே உயர்கல்வியிலும். அரசு வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.