'தப்புக் கணக்கெல்லாம்' சரியாகும்போது.. ராமசாமி, குப்புசாமி ஹெல்மெட் போடாமல் போனா தப்பா யுவர் ஆனர்??
சென்னை: ஹெல்மெட்... தமிழகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் தாண்டி கடந்த சில நாட்களாக அனைவரையும் பித்துப் பிடித்ததுபோல் அலைய வைத்துள்ள வார்த்தை இதுதான்.
ஜூலை 1 முதல் ஹெல்மெட் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் கட்டாயம் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து ஹெல்மெட் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர் மக்கள். அதுவும் தங்கம் விலை, வெங்காய விலை போல் ஏறிக்கொண்டே போய் கிட்டதட்ட சாதாரண ஹெல்மெட்டே 3000 ரூபாய் என்ற நிலைக்கு வந்து நிற்கின்றது.
ஹெல்மெட் வேண்டும், வேண்டாம் என்று பல தரப்பிலிருந்தும் சாதக, பாதக கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் நடைமுறைக்கும் வந்துவிட்டது "ஹெல்மெட்" புரட்சி. மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள ஹெல்மெட்களையே அணிய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அவசியம்:
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம், அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்வார்கள். ஆவணங்கள் இல்லாத வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்வார்கள். அந்த ஆவணங்களை காட்டிய பின்னர், போலீசாரிடம் சான்றிதழ் பெற்று சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு சென்று அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது.
அதே அதேதான் இதுவும்:
ஆனால், இதனால் எந்தவித உபயோகமும் இல்லை என்று குமுறுகின்றனர் ஒரு தரப்பினர். ஹெல்மெட் ஆண்களுக்கு சரிப்பட்டு வரும் என்றாலும் பெண்கள், குழந்தைகளுக்கு இது பெரும் உபத்திரவமாக இருக்கும் என்பது அவர்களது வாதமாகும்.
முதல் முறையல்ல
என்ன கொடுமை என்றால் ஹெல்மெட்டை கட்டாயமாக்கி சட்டம் போட்டு பல காலமாகி விட்டது. ஆனால் அதை அமல்படுத்துவதில்தான் குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தல் சமயத்தில் இதை கடைப்பிடிக்காமல் விடுவது, பிறகு கையில் எடுப்பது என்று ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் விளையாடி வருகின்றனர்.
வழக்கு... தள்ளுபடி...வழக்கு:
முன்பும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டது. அரசும் சில நாட்களுக்கு நடவடிக்கை எடுத்தது. இதனால் ஹெல்மெட் வியாபாரம்தான் பெருகியது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் வந்துள்ளது
தேவையில்லாத சிரமம்
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புதிய ஹெல்மெட் வாங்கி அதற்கான ரசீதை போலீசாரிடம் காட்ட வேண்டும் என்று கூறுவது தேவையில்லாத குழப்பத்தையும், சிரமத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகவும், வாகனங்களில் ஆவணங்களையும் பறிமுதல் செய்வது என்பது சட்டவிரோதம் எனவும் மக்கள் புகார் கூறிவருகின்றனர்.
போலீசாருக்கான கட்டளைகள்:
இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணிந்து இருந்தால் தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. சாலையில் தடுப்பு அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சோதனை நடத்தக்கூடாது. ஹெல்மெட் அணியாமல் பிடிபடுவோருக்கு எந்த வகையிலும் சலுகை காட்டக் கூடாது. ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று உள்ளிட்ட அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்கின்ற உத்தரவுகள் போலீசாருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரும்பி வாங்க அவகாசம்:
பின்னர் வாகன ஓட்டுனர்கள் தாங்கள் வாங்கிய ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மட்டையும், அதை வாங்கியதற்கான ரசீதையும் கோர்ட்டில் நேரடியாக காட்டி, தங்களது லைசென்ஸ் அசல் நகல் மற்றும் இருசக்கர வாகனத்தின் ஆவணங்களையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொருவரும் கோர்ட்டில் போய் அபராதம் கட்டக் குவிந்தால் அங்கு நீதிமன்றப் பணிகள் என்னாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உயிரைக் காப்பாற்றுமா ஹெல்மெட்?:
உண்மையில் இந்தச் சட்டம் அவசியம்தானா? ஒரு பக்கம் பார்த்தால் அவசியம்தான். அன்றாடம் பெருகி வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கையில் எந்த நேரத்திலும் விபத்து நிகழலாம் என்ற பயத்துடனே ஒவ்வொரு வாகன ஓட்டியும் தினசரி பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஹெல்மெட் அணிவதால் தலையில் அடிபடாமலாவது காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், நல்ல தரமான ஹெல்மெட் மட்டுமே உயிரைக் காப்பாற்றும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
குமுறும் இரவுப் பறவைகள்:
இது இப்படி இருக்க ஹெல்மெட் அணிவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளும் உள்ளன. ஹெல்மெட் அணிந்த போதே தலையில் அடிபட்டு இறந்து போனவர்தான் மெட்ரோ கம்பி விழுந்து உயிரிழந்த கிரி. சென்னையைப் பொறுத்த வரையில் கார்ப்பரேட் மக்கள்தான் அதிகம். இரவுப் பறவைகள் நிறைந்த சென்னையில் இரவு 2 மணிக்கெல்லாம் பின்னால் அமர்பவரும் கையில் ஹெல்மெட்டுடன் சுற்றுவது சாத்தியப் படாது என்கின்றனர் ஐடி மக்கள்.
கேள்விக்கென்ன பதில்:
திடீரென்று யாரோ ஒருவருக்கு லிப்ட் கொடுக்கும் போதோ, அவசரமான பணிக்காக விரைந்து செல்லும்போதோ பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது மிகவும் கடினம் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். பெண்களுக்கும், 12 வயதான குழந்தைகளுக்கும் விதிவிலக்கு என்றாலோ, பெரும்பாலும் வண்டிகளில் பயணம் செய்வது பெண்களும், குழந்தைகளும்தான். அவர்களுடைய பாதுகாப்பு தேவையில்லாத ஒன்றா என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.
போடனுமா? போடக்கூடாதா?:
"ஹெல்மெட் போடுறது கட்டாயம்னு ஒரு முறை சொன்னாங்க, அப்புறம் விருப்பப்பட்டா போடுங்கன்னு சொன்னாங்க. ஹெல்மெட் போடாம போறப்ப பல தடவை போலீஸ்காரங்க பார்த்துட்டு சும்மா இருப்பாங்க. திடீர்னு கூப்பிட்டு அபராதம் போடுவாங்க" என்றும் குமுறுகின்றனர் வாகன ஓட்டிகள்.
தாறுமாறாய் எகிறும் விலை:
குழந்தை, குட்டிகளுடன் வெளியில் செல்லும்போது எல்லோருக்கும் ஹெல்மெட் என்பது ரொம்பக் கஷ்டம் என்கின்றார்கள் குடும்பஸ்தர்கள். இந்நிலையில் என்று ஹெல்மெட் அவசியம் என்ற அறிவிப்பு வெளியானதோ அன்றிலிருந்து அதன் விலையும் தாறுமாறாக ஏறிக் கொண்டே செல்வதால் வண்டியின் விலையை விட ஹெல்மெட்டுக்கான செலவே அதிகம் என்றும் அங்கலாய்ப்பு பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.
புலம்பும் போலீசார்:
இந்நிலையில் போலீசார் தரப்பிலோ ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூறி "நீங்களே முன் வந்து ஹெல்மெட் அணிய வேண்டும்" என்று கூறினாலும் கேட்கமாட்டார்கள். அவர்கள் செய்த தவறுக்குத் தான் அபராதம் விதிக்கிறோம் என்பதுகூட புரியாமல் எங்களையும், எங்கள் குடும்பத்தையும் பலவாறு பேசுவார்கள் அந்த நேரங்களில் கஷ்டமாக இருக்கும். நாங்க என்னதான் செய்றது? என்று புலம்புகின்றனர்.
பலன் தருமா ஹெல்மெட்?:
வீட்டை ஏமாற்றி காதலிகளுடன் ஊர் சுற்றும் காதலர்களுக்கும், ஏடிஎம் கொள்ளையர்களுக்கும் மட்டுமே ஹெல்மெட் கைகொடுக்கும் என்றும், மற்றவர்களுக்கு தொடர்ச்சியான பயன்பாடு கடினம்தான் என்கின்ற கேலி, கிண்டல்களும் கூட சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றது.
மொத்தத்தில் ஹெல்மெட் நடைமுறைக்கு சாத்தியப்படுமா, இல்லையா அல்லது டிராபிக் போலீசாருக்கு மட்டுமே "பலனளிக்குமா?"என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!
"தப்புக் கணக்கை"யெல்லாம் மன்னிக்கிறீங்களே "யுவர் ஆனர்"
பெரிய பெரிய தலைகள் செய்யும் "தப்புக் கணக்கை"யெல்லாம் கண்டுக்காமல் விடும் நிலையில் சமுதாயம் இருக்கும்போது சாதாரண ராமசாமி, குப்புசாமி ஹெல்மெட் போடாமல் போனால் பிடித்து அமுக்குவது தவறில்லையா யுவர் ஆனர்.. பார்த்துப் பண்ணுங்க!