தலைவரின் கரகர குரல்.. அந்த கையசைப்பு.. அவர் வரவேண்டும்.. கோபாலபுரத்தில் நெகிழ்ச்சியான தருணங்கள்!
திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க வேண்டும் என்று நேற்று இரவில் இருந்தே திமுக தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு முன் கூடி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க வேண்டும் என்று நேற்று இரவில் இருந்தே திமுக தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு முன் கூடி வருகிறார்கள். இதனால் அங்கு பல நெகிழ்ச்சியான விஷயங்கள் நடந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 6 மருத்துவர் கொண்ட குழு மூலம் அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.
சில நாட்களுக்கு முன் அவருக்கு நடந்த ஆப்ரேஷனில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் இப்போது கொஞ்சம் தேறி வருவதாகவும் அவர் நல்ல உடல்நலனுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இரவு
நேற்று இரவே தலைவர்களோடு தலைவர்களாக தொண்டர்களும் அந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள். சரியாக 11 மணிக்கு கேபாலபுரம் வீட்டிற்கு முன்னில் கூடிய அவர்கள் இரவு 1 மணி வரைக்கும் அங்கேயே இருந்து இருக்கிறார்கள். கடைசியாக கோபாலபுரத்தின் கதவுகள் மூடப்படும் வரை அவர்கள் வீட்டிற்கு வெளியே காத்து இருந்தனர்.
காலையிலேயே வந்தனர்
காலையில், ஸ்டாலின், அழகிரி வரும் முன்பே நூற்றுக்கணக்கான மக்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு முன்பு கூடி விட்டனர். தலைவர் வர வேண்டும், தலைவர் குணமாகவேண்டும், தலைவர் குரலை மீண்டும் கேட்க வேண்டும் என்று மாறி மாறி கோஷம் எழுப்பி, வீட்டிற்கு வெளியே கூடினார்கள். ஆனால் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூட, மிகவும் அமைதியாக அவர்கள் கோஷம் எழுப்பி வீட்டிற்கு வெளியே நின்றனர்.
அமைதி
அவரின் வீட்டிற்கு வெளியே ஒரு பெருத்த அமைதி நிலவியது. போலீஸ் தடுப்புகள் போட்டு இருந்தாலும், ஆயிரக்கணக்கில் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும், தொண்டர்கள் வந்து கொண்டே இருந்தனர். பெரும்பாலான பெண்கள் வீட்டிற்கு வெளியே மரத்திற்கு அடியில் அழுதபடியே நின்று கொண்டு இருந்தனர். சிலர் அழுதபடியே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்தனர்.
குழந்தை மனசு
மு.க அழகிரி கோபாலபுரம் வரும் போதே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் இருந்தார். அவருடன் வந்த மதுரை திமுக தொண்டர்களும் பயண களைப்பிலும் கவலையிலும் இருந்தனர். அவர் உடல்நிலை முன்னேற்றம் கண்டு இருக்கிறது என்றபின்தான் கொஞ்சம் அவர்களுக்கு முகம் தெளிவானது. நேரமாக நேரமாக அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
என்ன வேண்டும்
அங்கு கூடி இருக்கும் மக்களின் கோரிக்கை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்களின் தலைவர் மீண்டும் வர வேண்டும். அவர்கள் எல்லோரும் அந்த கரகர குரலை கேட்க வேண்டும் என்றும், அந்த கை அசைவை பார்க்க வேண்டும் என்றும்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நேற்று இரவு உடல்நிலை மோசமானது என்றவுடன் வருத்தப்பட்ட அவர்கள், இப்போது கொஞ்சம் நம்பிக்கையோடு வீட்டிற்கு வெளியே காத்திருக்கிறார்கள்.