ஆம்னெஸ்டியின் மனித உரிமைகளுக்கான விருதுக்கு 'பீப்பிள்ஸ் வாட்ச்' ஹென்றி டிபேன் தேர்வு
மதுரை: ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் மனித உரிமைகள் விருதுக்கு பீப்பிள்ஸ் வாட்ச் எனப்படும் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவிலான மனித உரிமைகள் அமைப்பில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷன்ல் முன்னணி அமைப்பாகும். இதன் மனித உரிமைகள் விருதுக்கு ஹென்றி டிபேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பான களப் பணிகளில் தீவிர செயல்பாட்டாளராக ஹென்றி டிபேன் செயல்பட்டு வருபவர். அவரது பணிகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மனித உரிமைகளுக்கான விருதை வழங்குகிறது.
ஜெர்மனின் பெர்லினில் இந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி நடைபெறும் விழாவில் ஹென்றி டிபேனுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அண்மையில் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உயிர் தப்பிய சாட்சிகளைப் பாதுகாத்து மனித உரிமைகள் ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்க வைத்தது ஹென்றி டிபேனின் இந்த மக்கள் கண்காணிப்பகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.